தமிழக அரசின் சத்துணவு திட்டத்தில் கோழிக்கறி.. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!!
CM Stalin discuss about chicken adding in nutrition program
மேற்கு வங்க மாநிலத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு திட்டத்தில் வாரம் ஒருமுறை கோழிக்கறி மற்றும் பழங்கள் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த வாரம் அறிவித்திருந்தார். அதேபோன்று தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவு திட்டத்தில் வாரம் ஒருமுறை கோழிக்கறி வழங்குவது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 1962ல் அப்போதைய முதல்வர் காமராஜர் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். பின்னர் 1982ல் எம்ஜிஆர் முதல்வராக இருந்த பொழுது சத்துணவு திட்டம் என்ற பெயரில் விரிவுபடுத்தப்பட்டு அதற்கான துறை உருவாக்கப்பட்டது. பின்னர் முதல்வராக பதவியேற்ற கருணாநிதி சத்துணவில் முட்டை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பின்னர் பத்தாம் வகுப்பு மாணவர்கள் வரை கலவை சாதம் மற்றும் முட்டை மசாலா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் முதல்வராக பதவி வகித்த எடப்பாடி பழனிச்சாமி காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தை போல தமிழகத்திலும் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சத்துணவுடன் வாரம் ஒரு முறை கோழிக்கறி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கோழி பண்ணை உரிமையாளர்களுடன் மூத்த அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன்-3ல் கோழிக்கறி வழங்கும் திட்டம் துவங்க இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அசைவம் சாப்பிடாத குழந்தைகளுக்கு மாற்று பொருளாக என்ன கொடுக்கலாம் என்பது குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் கசிந்துள்ளன.
English Summary
CM Stalin discuss about chicken adding in nutrition program