தேனியில் பரபரப்பு - இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை.!
four peoples arrested for harassment case in theni
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு நேற்று வந்த இளம்பெண் ஒருவர் அங்கிருந்த போலீசாரிடம், தன்னை நான்கு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்கள் என்று புகார் அளித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலீசார் அந்த பெண்ணை தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மகளிர் போலீஸ் காவல் ஆய்வாளர் மங்கையர் திலகம், தேனி போலீஸ் காவல் ஆய்வாளர் ராமலட்சுமி ஆகியோர் அந்த பெண்ணிடம் விசாரித்ததில் அந்த பெண்ணுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருப்பதும், அவரிடம் பாலியல் பலாத்கார சம்பவம் எப்படி நடந்தது? என்றும் போலீசார் விசாரித்தனர்.

அதற்கு அந்த பெண், "நான் பழனிசெட்டிபட்டி பகுதியிலுள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் நேற்று முன்தினம் நின்றுகொண்டிருந்தேன். அப்போது, ஏற்கனவே அறிமுகமான ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும், மற்றொரு நபரும் அங்கு இருசக்கர வாகனத்தில் வந்தனர். அவர்கள் என்னை வீட்டில் விட்டுவிடுவதாக கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்தனர்.
அதை நம்பி ஏறியதும் என்னை மிரட்டி அல்லிநகரம் பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மேலும் இரண்டு பேர் வந்தனர். பின்னர் நான்கு பேரும் என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர். அதன்பிறகு என்னை அங்கிருந்து வேறு இடத்தில் இறக்கி விட்டுச் சென்று விட்டனர்" என்று தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் நான்கு பேரையும் நேற்று மாலை பிடித்து தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த விசாரணையை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து சட்டரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தேனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
four peoples arrested for harassment case in theni