நாங்குநேரி மாணவன் தாக்குதல் சம்பவம் - போலீசார் விளக்கம்.!
police explain nanguneri school student attack issue in tirunelveli
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பகுதியை சேர்ந்தவர்கள் முனியாண்டி-அம்பிகா தம்பதியினர். இவர்களுடைய மகன் சின்னத்துரை. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாதி ரீதியிலான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு படுகாயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அதன் பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் பெருமாள்புரம் திருமால் நகரில் உள்ள குடிசை மாற்று வாரியம் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று மாலை தனது நண்பன் அழைப்பதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற சின்னதுரையை கொக்கிரகுளம் அறிவியல் மையம் அருகே உள்ள வசந்த் நகரில் வைத்து சிலர் தாக்கியதாகவும், தன்னிடம் இருந்த பணம் மற்றும் செல்போனையும் பறித்துச் சென்று விட்டதாகவும் அவர் தனது தாயாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அந்தத் தகவலின் படி அங்கு விரைந்து சென்ற போலீசார் சின்னத்துரையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதற்கிடையே சின்னத்துரையை மீண்டும் தாக்கிய கும்பல் யார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் மாணவன் சின்னதுரையிடம் விசாரித்த போது, இணையதள செயலி மூலமாக நண்பர் ஒருவர் அறிமுகமாகி இருந்ததாகவும், அவர் திருமண பத்திரிகை கொடுக்க வேண்டும் என்று தன்னை அழைத்ததால், அதன்படி அப்பகுதிக்கு சென்றதாகவும் அங்கு திடீரென வந்த கும்பல் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை பிடிப்பதற்கு இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
police explain nanguneri school student attack issue in tirunelveli