பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் மாளிகையில் இன்று பொங்கல் விழா விருந்து..!!
Pongal party today at Tamil Nadu Governor House
தமிழக ஆளுநர் மாளிகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா நடைபெறும். இந்த விழாவில் முதலமைச்சர், அமைச்சர்கள், எம்பி.,க்கள், எம்எல்ஏ.,க்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள் என அனைவரும் அழைப்பிதழ் அனுப்பப்படும். ஆனால் இம்முறை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் உத்தரவுபடி ஆதீனங்கள், கிருத்துவ பிஷப்புகள், முஸ்லிம் மத குருமார்கள், விளையாட்டு துறையில் சாதனை படைத்த வீரர்கள், விவசாயிகள், தமிழ் ஆர்வலர்கள், சமூக வலைதள பிரபலங்கள், பழங்குடியின மாணவர்கள், சிறப்பாசிரியர்கள் போன்றவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர வழக்கம் போல் முதலமைச்சர், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என பல்வேறு துறையில் சிறந்த விளங்கும் 1800 பேருக்கு பொங்கல் விழா அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பொங்கல் விழா மற்றும் விருந்து இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகையில் தொடங்க உள்ளது. இன்று நடைபெறும் விழாவில் கரகாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், காவடி ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்ற தமிழ் பாரம்பரிய கிராம கலைஞர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மேலும் 22 வகையான பாரம்பரிய உணவு வகைகளுடன் இந்த பொங்கல் விருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கடந்த ஜனவரி 9ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் பொழுது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மீது திமுக அமைச்சர்களும், எம்எல்ஏக்களும், திமுக நிர்வாகிகளும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழா விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் நடைபெறும் பொங்கல் விழா விருந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
English Summary
Pongal party today at Tamil Nadu Governor House