மஹா சிவராத்திரி - தமிழகம் முழுவதும் கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு.!
special bus run in tamilnadu for maha shivaratiri
தமிழகம் முழுவதும் விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள் மற்றும் முக்கிய தினங்களில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- "மிகவும் பிரசித்தி பெற்ற மகாசிவராத்திரி திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருநெல்வேலி, திருச்செந்தூர், செங்கோட்டை, மதுரை, காரைக்குடி, திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் என பல்வேறு இடங்களுக்கு சென்று வர ஏதுவாக தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்தும், பெங்களூருவில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பேருந்து, இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் வருகிற 25-ந் தேதி சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படுகிறது. அதே போன்று, மேற்கண்ட இடங்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கும் வருகிற 26-ந் தேதி(புதன்கிழமை) சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இந்தச் சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.inஇணைதளம் மற்றும் டி.என்.எஸ்.டி.சி. அதிகாரப்பூர்வ செல்போன் செயலி மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, பயணிகள் மேற்படி பேருந்து வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
special bus run in tamilnadu for maha shivaratiri