பிரபாகரன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார் - திருச்சி வேலுச்சாமி.!
Trichy velusamy said Prabhakaran lived in Australia
தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் நலமுடன் இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது "தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களைப் பற்றிய ஒரு உண்மை அறிவிப்பினை வெளியீடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
சர்வதேச சூழலும், இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பிய சிங்கள மக்களின் போராட்டமும், தமிழின தேசிய தலைவர் பிரபாகரன் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த சூழலில் தமிழின தேசிய தலைவர் நலமுடன் இருக்கிறார்கள் என்ற செய்தியை உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பப்பட்ட ஐயங்களுக்கும் யூகங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறோம்.
தமிழீழ மக்களின் விடியலுக்கான யுத்தத்தை அவர் விரைவில் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும் உலகத் தமிழர்களும் ஒன்றிணைந்து அவருக்கு முழுமையான ஆதரவை வழங்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.
விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதுவாக இருந்தாலும் அந்த நாடுகளை தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. அவர்களை எதிர்த்து போராடி இருக்கிறார்கள். இந்தியாவுக்கு எதிரான எந்த நாடுகளுடனும் எந்த காலகட்டத்திலும் அவர்கள் எத்தகைய உதவிகளையும் பெற்றதில்லை.
இந்த முக்கியமான சூழலில் தமிழக அரசும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் தமிழீழ மக்களும் ஒன்று இணைந்து தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என அனைவரையும் வேண்டிக் கொள்கின்றோம்" என்ன செய்தியாளர்கள் சந்திப்பில் பழ.நெடுமாறன் பேசியுள்ளார். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததாக நம்பப்படும் நிலையில் பழ.நெடுமாறனின் இத்தகைய அறிவிப்பு உலகத் தமிழர்களுக்கு இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தேசிய கட்சி தலைவர்களும் மறுப்பு தெரிவித்திருந்தனர். மேலும் இலங்கை ராணுவம் பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் பிரபாகரன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார் என்று திருச்சி வேலுச்சாமி தெரிவித்துள்ளது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெர்மனி சென்றிருந்த போது பிரபாகரனுடன் சேர்ந்து தப்பித்த ஒருவரை சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அப்போது தலைவர் உயிரோடு இருக்கிறாரா என்று கேட்டதற்கு, அவர் சிரித்துக் கொண்டே ஆம் என்று கூறினார். பிரபாகரன் தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறார் என்று வேலுச்சாமி அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
English Summary
Trichy velusamy said Prabhakaran lived in Australia