நைஜீரியாவில் சோகம் : மணல் ட்ரக் மீது பேருந்து மோதல் - 20 பேர் பலி.!!
twenty passengers died for accident in nigeria
நைஜீரியாவில் லாகோஸ் பகுதியில் ட்ரக் மீது பேருந்து மோதி இருபது பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் சாலை விபத்துகள் அடிக்கடி நடந்த வண்ணம் உள்ளது. இந்த விபத்துகள் பெரும்பாலும் அதிக சுமை, மோசமான சாலைகள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் போன்றவற்றால் ஏற்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் தென்மேற்கு நைஜீரியாவின் லாகோஸில் பேருந்து ஒன்று 20 பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. இதையடுத்து இந்தப் பேருந்து, மோவா நகர் அருகே சென்று கொண்டிருக்கும் போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால், சாலையில் தறிகெட்டு ஓடிய பேருந்து அருகிலுள்ள டிரக் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் சிக்கி பேருந்தில் பயணம் செய்த சுமார் 20 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் மீட்புப் படையினருடன் விரைந்து வந்து உயிரிழந்த பயணிகளின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சாலை விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மணல் ஏற்றப்பட்ட டிப்பர் லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:- "வாகன ஓட்டிகள், அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் தேவையில்லாத உயிர் மற்றும் உடைமை இழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்" என்று அறிவுறுத்தினர்.
English Summary
twenty passengers died for accident in nigeria