டெல்லி கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி -ரெயில்வே அறிவிப்பு!
Delhi stampede: Railways announces ex-gratia of Rs 10 lakh each to kin of deceased
டெல்லி ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவியை ரெயில்வே அறிவித்துள்ளது.
உலகில் அதிகமானோர் கூடும் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான கும்பமேளா விழா உத்தர பிரதேசம் மாநிலத்தில் ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ந் தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக பிரயாக்ராஜ் மாவட்டத்திலும், கும்பமேளா நடைபெறும் பகுதிகளிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, செயற்கை தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்கப்படுகிறது. கும்பமேளாவில் நீராட விடுமுறை நாட்களில் அதிக கூட்டம் காணப்படுகிறது.
இந்தநிலையில் கும்பமேளா செல்வதற்காக டெல்லி ரெயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் இரவு 9:15 மணிக்கு அதிக அளவில் பயணிகள் திரண்டனர்.அப்போது 13, 14 மற்றும் 15-வது பிளாட்பாரங்களில் கூட்ட நெரிசல் அதிகமானது. இதையடுத்து அப்போது ரெயிலில் ஏற பயணிகள் முண்டியடித்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், 3 குழந்தைகள் உட்பட 18 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் பலர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ரெயில்வே நிர்வாகம் இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவிவை ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
English Summary
Delhi stampede: Railways announces ex-gratia of Rs 10 lakh each to kin of deceased