நீடிக்கும் பெண் மருத்துவர் கொலை வழக்கு!...எய்ம்ஸ் மருத்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்த முடிவு!
Female doctor murder case continues aiims doctors decide to hold a candlelight rally
மேற்குவங்காள மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக ப்ளூடூத் அடிப்படையில், சஞ்சய் ராய் என்ற நபரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து இதற்கு நீதி கேட்டும், பெண் மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் தற்போது வரை போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கு கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, ஆர்.ஜி.கார் மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இது குறித்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் பிற நீதிபதிகளான பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு தானாக முன்வந்து விசாரித்து வரும் நிலையில், மருத்துவர்களின் பாதுகாப்பு மற்றும் பிற விவகாரங்கள் தொடர்புடைய அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி தேசிய பணிக்குழுவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் நீதி கேட்டு கொல்கத்தா பயிற்சி டாக்டர்கள் உண்ணாவிரத போராட்ட அறிவிப்பை வெளியிட்டு உள்ள சூழலில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள் டெல்லியில் உள்ள ஜே.எல்.என். ஆடிட்டோரியத்தில் இருந்து நாளை மறுநாள் மாலை 6 மணியளவில் மெழுகுவர்த்தி ஏந்தி செல்லும் பேரணியை தொடங்குவதாக தெரிவித்துள்ளனர்.
English Summary
Female doctor murder case continues aiims doctors decide to hold a candlelight rally