122 கோடி ரூபாய் முறைகேடு; வங்கியின் பொது முகாமையாளர் கைது..!
General Manager of bank arrested for embezzling Rs 122 crores
122 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக வங்கியின் முன்னாள் பொது மேலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், 28 கிளைகளுடன் இயங்கும் 'நியு இந்தியா கூட்டுறவு வங்கி' மீது, நிதி முறைகேடு புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, அந்த வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி முடக்கியுள்ளது.
குறித்த வங்கி இயக்குனர்கள் குழுவை, 12 மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்ததோடு, வங்கியின் கணக்குகளை ஆய்வு செய்வதற்காக மூன்று பேர் அடங்கிய குழுவையும் ரிசர்வ் வங்கி நியமித்திருந்தது.
அதனை தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் அதிரடியால் அடுத்த ஆறு மாதத்துக்கு, வங்கியில் இருந்து பணம் எடுக்கவோ, டிபாசிட் செய்யவோ, கடனுதவி பெறவோ முடியாத நிலை உருவாக்கியது. இதன் காரணமாக, மும்பை முழுதும் உள்ள வங்கி கிளைகளில் நேற்று முன்தினம் பொதுமக்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.
![](https://img.seithipunal.com/media/bank-a586j.jpg)
அத்துடன், குறித்த வங்கியின் ஏ.டி.எம்.,களிலும் பணம் எடுக்க முடியாமல் வங்கியின் வாடிக்கையாளர்கள் தவித்து வருகின்றனர். வங்கியோடு தொடர்புடைய கூட்டுறவு வீட்டு வசதி கடன் சங்கங்களும் ஸ்தம்பித்துள்ளன.
இந் நிலையில், நியு இந்தியா கூட்டுறவு வங்கியின் முன்னாள் பொது மேலாளரும், கணக்குத் துறை தலைவருமான ஹிதேஷ் மேத்தா மீது, 122 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக வங்கியின் தலைமை செயல் அதிகாரி தேவர்ஷி ஷிஷிர் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
![](https://img.seithipunal.com/media/bank 1-q2rxd.jpg)
இது தொடர்பாக தாதர் போலீஸ் ஸ்டேஷனில் அவர் அளித்த புகாரில், ஹிதேஷ் மேத்தாவும், அவரது நண்பர்களும் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். குறித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் பொது மேலாளர் ஹிதேஷ் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பின்னர், அந்த வழக்கு, பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு ஹிதேஷ் மேத்தா விசாரணைக்காக அழைத்து வரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு முடக்கப்பட்டுள்ள 'நியு இந்தியா கூட்டுறவு வங்கி'-க்கு மும்பையை தவிர, புனே மற்றும் அண்டை மாநிலமான குஜராத்தின் சூரத்திலும் கிளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
General Manager of bank arrested for embezzling Rs 122 crores