பணமோசடி வழக்கு.. சமாஜ்வாடி கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., மனைவியுடன் கைது!
Money laundering case Ex-Samajwadi Party MLA wife arrested
உத்தர பிரதேச மந்திரியின் சகோதரியிடம் பிளாட் ஒன்றை வாங்கி தருகிறோம் என கூறி, ரூ.49 லட்சம் அளவுக்கு பணம் மோசடி செய்த சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டனர்.
உத்தர பிரதேசத்தில் தற்போது முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசில் அமைச்சரவையில் மந்திரியாக இருப்பவர்தான் நிதின் அகர்வால். இவருடைய சகோதரி ருச்சி கோயல்.
இந்தநிலையில் சகோதரி ருச்சி கோயல்ரிடம் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. சுபாஷ் பாசி மற்றும் அவருடைய மனைவி ரீனா பாசி ஆகிய இருவரும் பிளாட் ஒன்றை வாங்கி தருகிறோம் என கூறி, ரூ.49 லட்சம் அளவுக்கு பணம் மோசடி செய்துள்ளனர் என்பது சமீபத்தில் தகவல் வெளியானது.

இதையடுத்து இதுபற்றி கோயல் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, 2 பேருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன. இந்நிலையில், ஹர்தோய் போலீசார், சுபாஷ் பாசி மற்றும் அவருடைய மனைவியை கைது செய்தனர்.இதனால் அங்கு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சுபாஷ், 2012 முதல் 2017 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சமாஜ்வாடி கட்சி சார்பில் சையத்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் அவர், உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான நிஷாத் கட்சியில் தற்போது உள்ளார். இந்நிலையில், கோயல் அளித்துள்ள புகார் அடிப்படையில் அவரும், அவருடைய மனைவி ரீனாவும் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Money laundering case Ex-Samajwadi Party MLA wife arrested