நீதிபதிகளை விசாரிக்கும் லோக்பால் அமைப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை..!
Supreme Court bans Lokpal from investigating judges
உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்தும், ஊழல் புகார்கள் குறித்தும் விசாரிக்கும் அதிகாரம் தங்களுக்கு உள்ளது என்ற, லோக்பால் அமைப்பின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது. இரண்டு வெவ்வேறு உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது, ஊழல் புகார் கொடுக்கப்பட்டிருந்தது. இதன் பிறகு ஊழல் தொடர்பான புகார்களை விசாரிக்கும் லோக்பால் அமைப்பு, சமீபத்தில் ஒரு உத்தரவு பிறப்பித்தது.
அதாவது, 'லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தின்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகள், பொது சேவகர்கள் என்ற பிரிவில் வருகின்றனர். அந்த சட்டங்களில் நீதிபதிகளுக்கு எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை. அதனால், லோக்பால் சட்டத்தின்கீழ், உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்த ஊழல் புகார்களை லோக்பால் விசாரிக்க முடியும்' என, ஜனவரி- 27-இல் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தையும் லோக்பால் கேட்டிருந்தது. இந்த விவகாரம் குறித்து, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. குறித்த வழக்கு, நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் அபய் ஓகா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதன் போது “லோக்பால் அமைப்புக்கு இந்த அதிகாரம் கிடையாது,” என, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து, லோக்பால் அமைப்பின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்ற அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், இதுகுறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், லோக்பால் பதிவாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கின் விசாரணை, எதிர்வரும் மார்ச் 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
English Summary
Supreme Court bans Lokpal from investigating judges