கடந்த 19 ஆண்டுகளாக சுங்கச்சாவடி கட்டணங்கள் எதற்காக வசூலிக்கப்படுகிறது? விரைவில் போராட்டம் - செல்வப்பெருந்தகை அறிவிப்பு!
Congress Selvaperunthagai announce Tollgate Protest
#தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தைக் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. கடந்த ஜூன் 2024 அன்று சுங்கச்சாவடி கட்டணங்கள் 5 முதல் 7% உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது.
நீண்ட நெடுங்காலமாக சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை. கடந்த 19 ஆண்டுகளாக சுங்கக் கட்டணம் வசூலிப்பது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை.
இந்த வசூலின் மூலம் இதுவரை மொத்தம் கிடைத்த தொகை எவ்வளவு என்கிற விவரத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வெளியிட வேண்டும்.
தமிழ்நாட்டில் பல சுங்கச்சாவடிகள் காலாவதியாகி விட்ட நிலையில், சுங்கச்சாவடிகளில் வழக்கமான கட்டணத்தை வசூலிக்கக் கூடாது. காலாவதியான சுங்கச்சாவடிகளில் தனியார் வசூலிக்கிற தொகை யாருக்கு செல்கிறது ? அதில் பயனடைபவர்கள் யார் என்று தெரியவில்லை?
மதுரைக்கு அருகில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியால் மதுரையை சுற்றியுள்ள திருமங்கலம் போன்ற பகுதியிலுள்ள உள்ளூர் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார்கள்.
இந்தக் கட்டணம் கடுமையானது மட்டுமல்ல, பயணிகளை வஞ்சிக்கிற செயலாகும். இந்த சுங்கச்சாவடி கட்டணங்கள் எதற்காக வசூலிக்கப்படுகிறது?
“இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கட்டணம் வசூல் நீடிக்கும் என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி விளக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தைக் கண்டித்து போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் நடத்த விரும்புகிறது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைகளில் உள்ள 70 சுங்கச்சாவடிகளிலும் அந்தந்த பகுதிகளில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் விரைவில் முற்றுகை போராட்டங்களை நடத்தி கண்டனத்தை வெளிப்படுத்துவார்கள்" என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
English Summary
Congress Selvaperunthagai announce Tollgate Protest