ஆட்டம் காணும் ஆம் ஆத்மி! அடுத்தது கெஜ்ரிவால் தலையில் இறங்கும் இடி!
Delhi Mayor Election AAP BJP 2025
டெல்லி நகர்ப்புற அரசியலில் முக்கிய திருப்பமாக, ஆம் ஆத்மி கட்சியின் மூன்று கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ஆண்ட்ரூஸ் கஞ்ச் தொகுதியைச் சேர்ந்த அனிதா பசோயா, ஹரி நகர் பகுதியின் நிகில் சப்ரானா, ஆர்.கே. புரத்தின் தரம்வீர் ஆகியோர் டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தனர். பாஜக தலைமையகம் அவர்களுக்கு வெகுவிமர்சன வரவேற்பு வழங்கியது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வீரேந்திர சச்தேவா, "டெல்லியின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் டிரிபிள் எஞ்சின் அரசு தேவை. நகரின் சுகாதாரத்தை மேம்படுத்தவும், அடிப்படை வசதிகளை உறுதி செய்யவும், இந்த இணைப்பு முக்கியமானது" எனக் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் நடந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 70 இடங்களில் 48 இடங்களை வென்று பாஜக, ஆம் ஆத்மியை 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியிலிருந்து வெளியேற்றியது. தேர்தலுக்கு முன்பே பல எம்எல்ஏ-க்கள் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டனர்.
2024 நவம்பரில் நடைபெற்ற டெல்லி மாநகராட்சி மேயர்தேர்தலில் ஆம் ஆத்மி மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது அந்த கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.
எனவே, பெரும்பான்மை இழக்க வாய்ப்பு உள்ளதால், வரும் ஏப்ரலில் மேயர் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.
இந்த தேர்தலில் தற்போதைய, ஏழு மக்களவை எம்.பி., மூன்று மாநிலங்களவை எம்.பி.க்கள், 14 நியமன எம்.எல்.ஏ.க்கள் என மொத்த வாக்காளர்களுடன், பாஜகவுக்கு பெரும்பான்மை வாய்ப்பு கிடைத்துள்ளதால், டெல்லி மேயர் பதவியையும் பாஜக கைப்பற்றும் சூழல் உருவாகியுள்ளது.
English Summary
Delhi Mayor Election AAP BJP 2025