கொள்கை வேறு.. கூட்டணி வேறு.."1999ல் திமுக - பாஜக கூட்டணி"... சிறுபான்மையினர் மத்தியில் இபிஎஸ் பேச்சு..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி பகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவு கோரி சிறுபான்மையினர் அமைப்பினர் உடனான கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று பேசினார். அப்பொழுது பேசிய அவர் "கூட்டணி என்பது அவ்வப்போது ஏற்படும் தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். கட்சியின் கொள்கை என்பதுதான் நிலையானது. அதிமுகவைப் பொறுத்தவரை எந்த சூழ்நிலையிலும் எங்களின் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

எந்த மதமானாலும் எந்த சாதியானாலும் தமிழ்நாட்டில் பிறந்த அனைத்து மக்களும் எந்த வகையிலும் பாதிக்க கூடாது என்பதே அதிமுகவின் கொள்கை. தமிழகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பாதுகாப்பு அரணாக இருக்கும்.

சிறுபான்மை இன மக்களும் இந்த மண்ணில் மற்றவர்களைப் போல அனைத்து சுதந்திரம் பெற்று வாழலாம் அதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை. எந்த மதத்தை சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டாலும் முதலில் குரல் கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக மட்டும் தான். 

அரசியல் ஆதாயங்களுக்காக சிலர் அதிமுக மீது அவதூறு பரப்புகிறார்கள். அவர்கள் கூட்டணி வைத்துக் கொண்டால் இத்தகைய பேச்சுக்கு இடமில்லாமல் போய்விடுகிறது. கடந்த 1999ம் ஆண்டு யாருடன் கூட்டணி வைத்தார்கள் என்று உங்களுக்கு தெரியும்.

ஆனால் நாங்கள் அவ்வாறு இல்லை பிரச்சனை என்றவுடன் கூட்டணியில் இருந்து வெளியேறினோம். தமிழ்நாட்டின் மக்கள் நலனுக்காக மட்டுமே நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறினோம். ஆனால் திமுக அவ்வாறு இல்லை அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார்கள். பச்சோந்தி போல தனது நிறத்தை அவர்கள் மாற்றிக் கொள்வார்கள் அவர்களுக்கு கொள்கையும் கிடையாது கோட்பாடும் கிடையாது.

திமுகவை சேர்ந்த தலைவர்களுக்கு அவர்களின் சொந்த நலன் தான் முக்கியம். அதன் அடிப்படையில் தான் அவர்கள் கூட்டணி அமைத்தார்கள். ஆனால் அதிமுக கூட்டணி வைத்தாலும் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம். 

ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வாக்குகள் சிதறவிடக்கூடாது என்பதற்காகவே கூட்டணி அமைக்கின்றன. ஆனால் ஊடகங்கள் மூலம் அதிமுக மீது எதிர்மறை பிரச்சாரம் செய்து அதிமுகவுக்கு வாக்கு செலுத்த வேண்டுமா என்ற சந்தேகத்தை எழுப்பி விடுகின்றனர். 

இதன் காரணமாக நாங்களும் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். நாங்கள் கூட்டணி வைப்பதனால் அவர்கள் சொல்லும் அனைத்தையும் கேட்போம் என்று நினைக்கக் கூடாது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ஏற்பட்ட காவேரி பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தை 28 நாட்கள் முடக்கினோம்.

ஆனால் இன்றைய ஆட்சியாளர்களின் பிரதிநிதிகள் 38 பேர் நாடாளுமன்றத்தில் உள்ளனர். இவர்களால் தமிழ்நாட்டிற்காக குரல் கொடுக்கப்பட்டு ஒரு நாளாவது நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதா..? நீட் தேர்வை பற்றி தமிழகத்தில் மட்டும் தான் பேசுவார்கள். அதனை கொண்டு வந்தது திமுக தான், அதனை தடுப்பதற்கு அதிமுக முயற்சி செய்தது. 

ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டோம். நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக காங்கிரஸ் கூட்டணி தான். ஆனால் பழியை மட்டும் அதிமுக மீது சுமத்துகிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் நிறைவடைய போகிறது இதுவரை தமிழ்நாட்டிற்காக ஒரு முறை கூட குரல் கொடுத்ததில்லை" என சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் எதிர்க்கட்சித் தலைவர் எதற்கு பழனிச்சாமி பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EPS spoke in front of minority people representative in Erode East


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->