விசிக ஒரு .... கட்சி! லீக் ஆன ஆடியோ! நீ நீல சங்கி...! சர்ச்சையில் சிக்கிய கோபிக்கு குவியும் ஆதரவு!
Gopi Nayinar Leaked audio issue
அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், "கடவுள் இல்லை என்று சொல்வது மட்டும்தான் அறிவியலா? மண்ணை அள்ளக்கூடாது என்று சொல்வது அறிவியல் இல்லையா?
கடவுள் இல்லை என்று சொல்வது மட்டும்தான் பகுத்தறிவா? இயற்கை வளங்களைச் சூறையாடக்கூடாது என்று சொல்வது பகுத்தறிவு இல்லையா?
நீ ஒரு பகுத்தறிவாளனென்றால், இயற்கை வளங்களை சூறையாடுவதற்கு எதிராகப் பேசுகிற என் போன்றவர்களை, 'உன்னைப் போன்றவர்கள்தான் அரசுக்குத் தேவை' எனக் கூறி, அரவணைத்துக் கொள்ள வேண்டுமா? வழக்குப் போட்டு அச்சுறுத்த வேண்டுமா?
அப்படியென்றால், நீ யாராக இருக்கிறாய்? திராவிடமெனும் பெயரில் சர்வாதிகாரம் செய்கிறாய். அவன் சனாதனம் எனும் பெயரில் சர்வாதிகாரம் செய்கிறான். சர்வாதிகாரம் எதன் பெயரில் இருந்தாலென்ன? சர்வாதிகாரம் சர்வாதிகாரம்தானே" என்று பேசி இருந்தார்.
மேலும், பெரியாரிஸ்டுகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதனை தொடர்ந்து கோபி நயினார் ஆபாசமாக பேசும் இரு ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
அதில், வன்னியர் சமூகத்தை தரம் தாழ்த்தி பேசியதும், விசிக ஒரு ... கட்சி அவர் பேசியதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. (அதிக ஆபாச வார்த்தைகள் & சாதிய மோதலுக்கு வழிவகை செய்யும் என்பதால் அந்த ஆடியோ இங்கு பகிரப்படவில்லை)
இந்நிலையில், கோபி நயினாருக்கு ஆதரவாக நாதக இடும்பாவனம் கார்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "அண்ணன் கோபி நயினார் அவர்களது அறச்சீற்றம் மிக நியாயமானது. மக்கள் பக்கம் நின்று, அரசதிகாரத்தைக் கேள்வி எழுப்பாது, அரசதிகாரத்தின் பக்கம் நின்று, மக்களை தனது வசப்பு வார்த்தைகளால் ஏமாற்ற முனையும் பிழைப்புவாத பெரியாரிஸ்டுகளைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார்.
கோபி நயினார் கூறியதுபோல, மதிவதனி போன்ற பெரியாரியவாதிகள் விளிம்பு நிலை மக்களுக்காகப் பேசுவது போலத் தோன்றும். ஆனால், அவர்கள் அதிகார வர்க்கத்தின் கைப்பாவைகள்! ஆளும் அரசின் ஊதுகுழல்கள்! ஆட்சியாளர்களுக்கு வெண்சாமரம் வீசிப் பிழைக்கும் ஒட்டுண்ணிகள்!
வேங்கைவயல் வன்கொடுமை அதிமுகவின் ஆட்சிக்காலத்திலோ, பாஜக ஆளும் மாநிலங்களிலோ நடந்திருந்தால் மதிவதனி, அருள்மொழி, ஓவியா, சுப.வீ., மதிமாறன் போன்றவர்களின் குரல்கள் எவ்வளவு ஓங்கி ஒலித்திருக்கும்?
திமுகவின் ஆட்சியில் நடந்ததால் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள் அல்லது 'வேங்கைவயலை வைத்து அரசியல் செய்யாதீர்கள்' என ஆளும் வர்க்கத்துக்கு முட்டுக் கொடுக்கிறார்கள். உண்மையில், துரை தயாநிதி ஒரு தீர்க்கதரிசிதான்! கி.வீரமணி குறித்து அன்றே சரியாக மதிப்பீடு செய்தார்" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், மக்கள் நீதி மய்ய கட்சியின் முன்னாள் நிர்வாகி நடிகை வினோதினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தோழர் கோபி நயினார் அவர்கள் பேசிய இரண்டு ஆடியோ துணுக்குகள் கசிந்திருக்கின்றன. அவர் என்ன பேசியிருந்தாலும் அது அவருடைய தனிப்பட்ட கருத்து, அக்கருத்தை தனிப்பட்டமுறையிலோ பொதுவெளியிலோ வைப்பதற்கு அவருக்கு முழு சுதந்திரம் இருக்கிறது.
அதற்காக “நீங்க எக்ஸ்போஸ் ஆகிட்டீங்க, நீ நீல சங்கி” என்று அவர்மீது உண்மைத்தன்மையற்ற சாயம் பூசப்படுவது அநியாயம். அவர் குரலை நெரிப்பதும் ஒடுக்குமுறையே" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Gopi Nayinar Leaked audio issue