ஒரு நொடி அல்ல, ஒரு யுகமே ஆனாலும் உங்களால் முடியாது! ஆட்சி இருக்காது - எச்சரித்த நாராயணன் திருப்பதி!
Narayanan Thirupathy BJP Condemn to DMK Govt MK Stalin
மத்திய அரசு கல்வி விவகாரத்தில் அரசியல் செய்து வருவதாகவும், தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பெறும் வரியை நிறுத்த ஒரு நொடி போதுமானது எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, "ஒரு நொடி அல்ல, ஒரு யுகமே ஆனாலும், இந்திய அரசின் வரியை நிறுத்த உங்களால் முடியாது.
இவ்விதமாக பேசுவது முதலமைச்சருக்கு அழகல்ல. தைரியம் இருந்தால், நீதிமன்றத்தில் இதே வார்த்தைகளை சொல்லிப் பாருங்கள். வரியை நிறுத்துவேன் என்று கூறுபவர்களின் ஆட்சியை நீதிமன்றம் நிறுத்தும்" என நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் , "கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் மலைக்கோட்டையில் காதல் ஜோடி ஒன்றுக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியளிக்கிறது. ஆண், பெண் இருவரையும் நிர்வாணமாக்கி அவர்களின் உடமைகளை திருடி, பெண்ணை வன்கொடுமை செய்த கலையரசன், அபிஷேக், நாராயணன், சுரேஷ் ஆகிய நான்கு பேர் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நிலையில், நான்கு பேரையும் அம்மாவட்ட காவல் துறை கைது செய்துள்ளது வரவேற்கத்தக்கது.
ஆனால், குற்றச்செயல்கள் நடந்த பின் குற்றவாளிகளை சுட்டுப் பிடித்தாலும் கூட, குற்றங்கள் நடை பெறாத சூழ்நிலையை தக்க வைப்பது தான் சட்டம் ஒழுங்கு காவல் துறையின் முக்கிய நோக்கமாக/பணியாக இருக்க வேண்டும். தமிழகத்தில் 'திராவிட மாடல்' திமுக ஆட்சி அமைந்த கடந்த நான்கு வருடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது கண்கூடு. சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதை தரவுகள் தெளிவாக சொல்கின்றன. அண்ணா பல்கலைகழக விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபர் உட்பட பெரும்பாலான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பொதுவான சில விஷயங்களை நாம் காண முடிகிறது.
1. குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் ஏற்கனவே அந்த பகுதிகளில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களாக இருக்கிறார்கள்.
2. மது அல்லது போதை பொருட்களுக்கு அடிமையானவர்களாக உள்ளார்கள்.
3. அந்த பகுதிகளில் உள்ள அதிகாரமுள்ள அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார்கள்.
4. காவல் துறையினர் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிப்பதில் சுணக்கம் நிலவுகிறது. காவலர் பற்றாக்குறை, அதிக பணி சுமை, அரசியல் தலையீடு ஆகியவை தான் இதற்கு முக்கிய காரணம் என்பதே உண்மை. அந்தந்த பகுதிகளை சேர்ந்த காவல் துறையை சேர்ந்த ஒரு சிலர் இந்த குற்றவாளிகளிடம் நெருக்கமாக உள்ளதும் மறுப்பதற்கில்லை.
கடந்த நான்கு வருடங்களில் திராவிட மாடல் திமுக அரசின் படு தோல்வியை இந்த சட்டம் ஒழுங்கு சீர்கேடு உணர்த்துகிறது. போதை பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறி விட்டது மாநில அரசு. டாஸ்மாக் தவிர வேறு எங்கும் மது விற்கப்படுவதாக அரசு ஒப்புக்கொள்ளாது என்கிற நிலையில், டாஸ்மாக் மது அதிக போதையை ஏற்றுகிறது என்பது புரிந்தும், போதையை தடுக்க மறுக்கிறது அரசு. இதையெல்லாம் கண்டும் காணாமல், திராவிட மாடல் திமுக ஆட்சியில் பாலாறு ஓடுகிறது, தேனாறு வழிகிறது, என்று குடம் குடமாய் பொய்யை அள்ளி வீசுகிறது திமுக. அதற்கு ஜால்ரா அடித்து கொண்டிருக்கின்றன திமுக வின் அடிமை கூட்டணி கட்சிகள்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
English Summary
Narayanan Thirupathy BJP Condemn to DMK Govt MK Stalin