புதிய குற்றவியல் சட்டம் நீதி நிர்வாகத்தில் பல குழப்பங்களை ஏற்படுத்தும் - ப. சிதம்பரம் கருத்து..!
P Chidhambaram Speaks About New Criminal Penal Code
நாடு முழுவதும் இன்று (ஜூலை 1) முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதுகுறித்து மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் தனது எக்ஸ் வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, "3 புதிய குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்துள்ளன. ஏற்கனவே இருந்த சட்டத்தில் சில திருத்தங்கள் செய்து நடைமுறைப் படுத்தி இருக்கலாம். ஆனால் 99 சதவீதம் பழைய சட்டங்களின் நகலாக உள்ள இந்த புதிய சட்டங்களை 3 ஆக பிரித்து அமல்படுத்தி இருப்பதன் மூலம் ஒரு வீணான செயலை தான் மத்திய அரசு செய்துள்ளது.
இந்த புதிய சட்டத்தில் உள்ள சில மேம்படுத்தப் பட்ட விஷயங்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இந்த சட்டம் குறித்து எந்த ஆக்கப் பூர்வமான விவாதங்களும் நாடாளுமன்றத்தில் செய்யப்படவில்லை. மேலும் சட்ட நிபுணர்கள் இந்த புதிய சட்டத்தில் உள்ள பல்வேறு குறைகளை சுட்டிக் காட்டினர். அவர்கள் யாருக்கும் மத்திய அரசு பதிலளிக்கவில்லை.
இந்த புதிய சட்டங்கள் எந்த விவாதத்திற்கும் இடமளிக்காமல் கொண்டு வரப்பட்டுள்ளன. நிச்சயம் இந்த புதிய சட்டங்கள் நீதித் துறையின் நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும் நீதி மன்றங்கள் புதிய சவால்களை எதிர் கொள்ள வேண்டியதாக இருக்கும்.
நிச்சயம் இந்த 3 சட்டங்களிலும் பல்வேறு மேம்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் எதிர் காலத்தில் ஏற்படும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
P Chidhambaram Speaks About New Criminal Penal Code