மத்திய ரயில்வே அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்!...செல்வப்பெருந்தகை கடும் காட்டம்!
The central railway minister should resign immediately selvaperunthagai
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்லப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிக்கு அருகில் கவரப்பேட்டையில் பாக்மதி விரைவு இரயில் நின்று கொண்டிருந்த சரக்கு இரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டு இரயில் பெட்டிகள் சிதறி கிடக்கின்ற கோர நிகழ்வு நடந்துள்ளது. சிக்னல் கோளாறு காரணமாக மெயின் லைனில் போக வேண்டிய விரைவு இரயில் லூப் லைனில் சென்று கொண்டிருந்த சரக்கு இரயிலின் பின்புறத்தில் மோதி இரயில் விபத்து ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒடிசா பாலசோர் இரயில் விபத்தில் 293 பேர் மரணமடைந்து ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்த நிகழ்விற்கு பிறகு இரயில் விபத்து ஏற்படாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இரயில்வே அமைச்சர் வாக்குறுதி வழங்கியிருந்தார். விபத்து நடைபெறாமல் தடுக்கின்ற பாதுகாப்பு கவசமாக கவாச் பொருத்தப்பட்டு விபத்து நடக்காமல் தடுக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் தொடர்ந்து இத்தகைய விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த 2014 முதல் 2023 வரை ஒன்றிய பாஜக ஆட்சியில் நடந்த இரயில் விபத்துகளில் 281 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 1543 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இத்தகைய விபத்துகளை தடுப்பதற்கு தானியங்கி இரயில் பாதுகாப்பு அமைப்பான கவாச் பொருத்துவதற்கு நிதி ஒதுக்கப்படும் என்று ஒன்றிய பாஜக அரசு கூறியது. ஆனால் இதுவரை 1465 கிலோமீட்டருக்கு தான் கவாச் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த வேகத்தில் பொருத்தப்பட்டால் அனைத்து இரயில் பாதைகளிலும் கவாச் பொருத்த இன்னும் எத்தனை ஆண்டுகாலம் தேவைப்படும் என்று தெரியவில்லை. இரயில்வே விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் செய்தி வழங்குவதோடு தமது கடமையை முடித்துக்கொள்கிறார். ஆனால் இரயில் விபத்துக்களுக்கு யார் பொறுப்பு?.
தமிழக மக்களுக்கு நன்றாக நினைவிருக்கும் 1956 இல் அரியலூரில் நடந்த இரயில் விபத்திற்கு அன்றைய இரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் பொறுப்பேற்று பதவியை விட்டு விலகிய முன்மாதிரியை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே தொடர்ந்து நடைபெற்று வருகிற இரயில்வே விபத்துகளுக்கும், உயிர் இழப்புகளுக்கும், பாதிக்கபப்ட்டவர்களுக்கும் பொறுப்பேற்று ஒன்றிய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் அவர்கள் ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
The central railway minister should resign immediately selvaperunthagai