ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு நீக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம்..!
The Union Government should remove RNRavi from the post of Governor Marxist Secretary Shanmugam
ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு நீக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தூத்துக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக ஒன்றிய அரசு அரசியல் செய்கிறது என்று தெரிவித்தார். அத்துடன், இதற்காக பாகிஸ்தானில் இருந்து மருத்துவத்திற்காக வந்த மக்களை திருப்பி அனுப்புவது, சிந்து நதி நீரை வழங்க மறுப்பது தவறானதாகும் என குறிப்பிட்டார்.

இந்நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை கூட்டுவதற்கு மாநில ஆளுநருக்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது என்ற நிலையில், இம்மாநாட்டை அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உள்பட தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களும் புறக்கணித்து எதிர்ப்பை வெளிப்படுத்தியதன் மூலம் அது தோல்வி அடைந்துள்ளது என சுட்டிக்காட்டினார்.
அத்துடன், தமிழக ஆளுநர் அரசியல் சாசனத்திற்கு விரோதமாகமாகவும், உள்நோக்கத்துடனும் செயல்படுகிறார் என உச்சநீதி மன்றம் குற்றம்சாட்டிய பிறகும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யாமல் பதவியில் இருந்துகொண்டிருக்கிறார். ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு நீக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அத்துடன், இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் எனவும், தனியார் நிதி நிறுவனங்கள் மக்களிடம் கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் பிணையில் வெளியே வரமுடியாத வகையில் சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மசோதாவை வரவேற்கிறோம் எனவும் பேசினார்.
இதனை தொடர்ந்து அவர் பேசுகையில், கச்சத் தீவை மீட்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து நடத்தி மீட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கூறிய கருத்து ஏற்புடையதல்ல என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்றும், காலிப்பணியிடங்களை நிரப்புவதோடு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றினால் 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைக்கும்என்று செய்தியாளர்களிடம் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
English Summary
The Union Government should remove RNRavi from the post of Governor Marxist Secretary Shanmugam