ஆட்சியில் பங்கு! திருமாவளவன் ஒப்பந்தம் ஏதும் போடலையே - திமுக தரப்பில் பதிலடி!
VCK Thirumavalavan X Post DMK Side reply
நேற்று காலை திருமாவளவன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று ஒரு காணொளியை பகிர்ந்து பரபரப்பை உண்டாக்கினார். பின்னர் அடுத்த சில மணி நேரங்களில் அந்த காணொளியை அவர் டெலிட் செய்த நிலையில், இது குறித்த விவாதம் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதற்கு விளக்கம் அளித்த திருமாவளவன், தனது அட்மின் தவறு செய்திருக்கலாம், என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது, நான் அந்த காணொளியை நீக்கவில்லை, இது எங்களுடைய அரசியல் ரீதியான நீண்ட கால கருத்து தான் என்று திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
நேற்று மாலை 5 மணியளவில் மீண்டும் அதே காணொளியை திருமாவளவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,
"கடைசி மனிதனுக்கும் சனநாயகம்!
எளிய மக்களுக்கும் அதிகாரம்!
ஆட்சியிலும் பங்கு !அதிகாரத்திலும் பங்கு ! - என 1999ல் தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்த போதே உரத்து முழங்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி" என்று திருமாவளவன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஆட்சியில் பங்கு என்ற திருமாவளவனின் கருத்து பற்றி முதலமைச்சர் முக ஸ்டாலின் தான் முடிவு எடுப்பார் என்று, திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆட்சியில் பங்கு என்ற கருத்தை திருமாவளவன் திமுகவிடம் நேரடியாக இதுவரை தெரிவிக்கவில்லை என்றும், ஆட்சியில் பங்கு குறித்து கடந்த தேர்தலின் போது எந்த வித ஒப்பந்தமும் போடவில்லை என்றும் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
English Summary
VCK Thirumavalavan X Post DMK Side reply