தென்காசியில் ஊரை விட்டு விலக்கி வைக்கப்பட்ட 08 குடும்பங்கள்; ஆட்சியருக்கு நோட்டிஸ்; தேசிய மனித உரிமை ஆணையம்..!
08 families evicted from Tenkasi village National Human Rights Commission sends notice to Collector
தென்காசி மாவட்டத்தில் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் 08 குடும்பங்களை ஊரை விட்டு விலக்கி வைத்த சம்பவம் இடம்பெற்றது. இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும், இது தொடர்பாக 02 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பகுதியில் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில், குடும்பங்களை ஊரை விட்டு சிலர் விலக்கி வைக்கப்படுவதாக கடந்த சில ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்குமுன் இதே கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரை இடப் பிரச்சினை காரணமாக ஊரை விட்டு விலக்கி வைத்துள்ளதோடு, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவரிடம் பேசிய நபரையும் ஊரை விட்டு ஒதுக்கிவைத்துள்ளதோடு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கலப்பு திருமணம் செய்த குடும்பத்தையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஊர் நாட்டாமை வெங்கடேஷ் என்பவர், 8 குடும்பங்களை ஊரை விட்டு விலக்கிவைத்துள்ளார். இவ்வாறு அவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் தங்களுடன் ஊர் மக்கள் பேசுவதற்கு அஞ்சுகின்றனர். கடைகளில் பொருட்களை வாங்க முடியவில்லை என்றும் கூறி, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மாதம் 20-ஆம் தேதி மீண்டும் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, உரிய அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளில் வெளியானது.
குறித்த செய்திகளை அடிப்படையாக கொண்டு, தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவகாரத்தில் தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக 02 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோருக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
English Summary
08 families evicted from Tenkasi village National Human Rights Commission sends notice to Collector