ஆட்சி இருக்கும் மமதை, ஆணவத்தில் முதல்வர்... உங்களுக்கு இருக்கு... மறைமுக எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிச்சாமி!
AIADMK Edappadi Palaniswami Fasting Protest end
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரி, சென்னையில் ராஜரத்தினம் மைதானம் அருகே எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுகவின் உண்ணாவிரதம் நிறைவு பெற்றுள்ளது.
முன்னதாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெறும் போது எதிர்க்கட்சிக்கு 10 நிமிடங்கள் தான் தருகிறார்கள்.
அதிமுக ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சிக்கு 40 நிமிடங்கள் தரப்பட்டது. 3 ஆண்டுகளாக கவனித்து வருகிறோம், முதலில் பேசும் எதிர்க்கட்சி உறுப்பினருக்கு 10 நிமிடங்களும், அடுத்து பேசும் உறுப்பினர்களுக்கு 5 நிமிடங்கள் தான் திமுக ஆட்சியில் தரப்படுகிறது.
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என விதிகளுக்கு உட்பட்டு அறவழியில் பேச வாய்ப்பு கேட்டோம். ஆனால் பேரவைத் தலைவர் அப்பாவு பேச வாய்ப்பு தரவில்லை.
பேரவைத் தலைவருக்கு மனு அளித்து பேச வாய்ப்பு கேட்டோம் ஆனால் பேச அனுமதிக்கவில்லை. ஒரு நல்ல அரசுக்கு அடையாளம் எதிர்க்கட்சியை பேச விட்டு அதற்கு ஏற்ற பதிலளித்து, பிரச்னைகளை சரி செய்வது தான். மக்கள் பிரச்னை தான் பிரதானம், சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னை தொடர்பான கருத்துக்களை முன்வைத்தோம்.
ஆட்சி இருக்கும் மமதையில், ஆணவத்தில் முதல்வர் மற்றும் சில அதிகாரிகள் பேசுகின்றனர், ஆணவம் வேண்டாம்; சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கும்; அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். எந்த காலத்திலும் அதிமுக அஞ்சாது.
மாநில அரசுக்கு உட்பட்ட சிபிசிஐடி போலீசாரிடம் வழக்கை ஒப்படைப்பதால் எந்த பலனும் இல்லை, அதனால் தான் சிபிஐ விசாரணை கேட்கிறோம்.
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அனைவருக்கும் அதிமுக சார்பில் நன்றி” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதற்கிடையே, கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் இதுவரை 118 பேர் உடல் நலம் தேறி வீடு திரும்பியுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து 229 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில், 63 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது வரை 48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனபது குறிப்பிடத்தக்கது.
English Summary
AIADMK Edappadi Palaniswami Fasting Protest end