'படுகொலை' மாடல் அரசு! ரெளடிகளின் ராஜ்ஜியமாகிறது தலைநகரம் - ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு தலைவர்கள் கண்டனம்!
Bahujan Samaj Party State President Armstrong murder
சென்னை : பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் இன்று இரவு 7.30 மணியளவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள பாஜக தமிழநாடு மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, இது 'திராவிட மாடல்' அரசு அல்ல இந்த அரசு, 'படுகொலை' மாடல் அரசு என்று விமர்சித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் X தள பக்கத்தில், "பகுஜன்சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை. சென்னை நகரம் 'கொலை நகரம்' என அழைக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சத்தில் தமிழகம். தொடர் படுகொலைகள் - ரெளடிகளின் ராஜ்ஜியமாகிறது தலை நகரம் . அமைதி காக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில் பதவி விலகட்டும். 'திராவிட மாடல்' அரசு அல்ல இந்த அரசு, 'படுகொலை' மாடல் அரசு" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதேபோல், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி விடுத்துள்ள கண்டன அறிக்கையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி மிகுந்த வேதனையை தருகிறது.
ஏறக்குறைய 25 வருடங்களுக்கு மேலாக பகுஜன் சமாஜ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அக்கட்சியின் கொள்கைகளை நிறைவேற்றப் பாடுபட்டு வந்தவர்.
அவர் இன்று தனது வீட்டின் அருகிலேயே கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. தனிப்பட்ட பகையானாலும், அரசியல் காழ்ப்புணர்வானாலும் இது போன்ற வன்முறைகள் தீர்வை தராது.
இப்படுகொலையை வன்மையாக கண்டிக்கிறோம். கொலையில் ஈடுபட்டுள்ள உண்மைக்குற்றவாளிகளை கைது செய்து, உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது கட்சியினருக்கும் புதிய தமிழகம் கட்சி சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
English Summary
Bahujan Samaj Party State President Armstrong murder