விவசாயிகள் வீட்டுச் சிறை - திருச்சி மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு..!
High Court Orders on Farmers Issue to Trichy Police
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான போராட்டத்தில் விவசாயிகளை பங்கேற்க விடாமல் வீட்டுச் சிறையில் வைப்பதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் திருச்சி மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் அவர், "விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுகிறோம்.
ஆனால் காவல் துறையினர் இப்போராட்டங்களில் என்னை பங்கேற்க விடாமல், வீட்டுச் சிறையில் வைக்கின்றனர். அந்த வகையில் கடந்த ஜூன் 20ம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் அமைப்பு நடத்திய கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற என்னை, திருச்சி உதவி காவல் ஆணையர் வீட்டுச் சிறையில் வைத்து விட்டார்.
![](https://img.seithipunal.com/media/j4.12.1-lsc6k.png)
இதே போல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களிலும் என்னை போலீசார் பங்கேற்க விடாமல் வீட்டுச் சிறையில் வைத்து விடுகின்றனர். இதுகுறித்து பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே காவல்துறையின் இந்த விவசாயிகளை வீட்டுக் காவலில் வைக்கும் நடவடிக்கையை நிறுத்த உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி பி. புகழேந்தி, திருச்சி மாநகர காவல் ஆணையர் இது தொடர்பாக 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.
English Summary
High Court Orders on Farmers Issue to Trichy Police