அரியர் வைத்துள்ள மாணவரா நீங்கள்? - உயர்கல்வித்துறை அமைச்சர் சொன்ன அதிரடி தகவல்.!
higher education department kovi chezhiyan announce polytechnic college students
உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இறுதி ஆண்டு முடித்தும் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் தங்களின் வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்ல இயலாத சூழ்நிலையினை கருத்தில் கொண்டு அவர்களும் வாழ்வில் முன்னேற்றம் பெற தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் தெரிவித்துள்ளதாவது:- "தமிழ்நாட்டு மக்களின் பொருளாதார தேவையை அறிந்து அரசின் அனைத்து துறைகளின் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, மாணவர்களின் மீது தனி அக்கறை கொண்டு உயர் கல்வித்துறையில் பல்வேறு நல திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கல்வி தரத்தை செம்மைப்படுத்தி வருகிறது.
ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பயின்று, தகுந்த வேலை வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தொழிற்சாற் கல்வியினை வழங்கி வருகிறது. பாலிடெக்னிக் கல்லூரி பயின்று பல்வேறு குடும்பச் சூழ்நிலைகளால் தேர்ச்சி பெறாமல் நிலுவை வைத்துள்ள பாடங்களுக்கு தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு வழங்கும்படி மாணவர்களிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனிவுடன் பரிசீலித்து உத்தரவிட்டார்.
அதன்படி, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இறுதி ஆண்டு முடித்தும் பல்வேறு காரணங்களால் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் தங்களின் வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்ல இயலாத சூழ்நிலையினை கருத்தில் கொண்டு அவர்களும் வாழ்வில் முன்னேற்றம் பெற ஏதுவாக அரசு எதிர்வரும் ஏப்ரல் 2025 மற்றும் அக்டோபர் 2025 பருவத் தேர்வுகளின்போது, நிலுவைப் பாடங்கள் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு வழங்க முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பான விவரங்களை https://dte.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். இந்தச் சிறப்பு வாய்ப்பினை சில பாடங்களில் தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் மாணவர்கள் பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
higher education department kovi chezhiyan announce polytechnic college students