சசிகலா திமுகவின் பி-டீமாக செயல்படுகிறார்.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


சசிகலா திமுக-வின் பி-டீமாக செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுகவின் கொடியையும், பொதுச் செயலாளர் என்ற பதவியையும் சசிகலா பயன்படுத்தி வருவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,

இந்தியத் தேர்தல் ஆணையம், டெல்லி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என பல இடங்களில் சசிகலாவின் மனு தள்குபடி செய்யப்பட்ட நிலையில், கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவேண்டும் என்றும், மோசடியான வேலைகளில் ஈடுபட்டு, அமைதிக்குப் பங்கம் விளைவிக்கவேண்டும் என்ற குற்ற எண்ணத்தோடு குழப்பத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் உள்ள சசிகலாவின் செயல் சட்டத்திற்கு உட்பட்ட செயல் அல்ல என்று தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சசிகலாவின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில்கூட சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தன்னை பொதுச்செயலாளராக அறிவிக்கவேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதனை கூட இன்றைக்கு நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதாக கூறினார்.

மேலும் இவர்கள் முழுமையான அளவுக்குச் சட்டத்தை மதிக்காமல், உள்நோக்கத்தோடு, பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி அன்று எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திற்குச் சென்று அங்குக் கல்வெட்டைத் திறந்து, கொடியை ஏற்றினார்.

அந்த கல்வெட்டில் தன்னை பொதுச்செயலாளர் என்று சசிகலா போட்டுக்கொண்டதாகவும், இது குறித்து காவல் நிலையத்தில், சசிகலாவின் செயல் சட்டத்தை மீறியது, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிய வேண்டும் என்ற அடிப்படையில் குறிப்பிட்டு புகார் அளித்தும், அவர் மீது எப்ஐஆர் போடுவதற்கு இந்த அரசுக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் காவல் ஆணையரிடம் கடிதம் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் கிணற்றில் போட்ட கல் போல இருப்பதாக தெரிவித்தார். 

இவ்வாறு நடவடிக்கை எடுக்காததால், நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும், இன்றைய விசாரணையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாக்கு மூலம் அளித்துள்ளதாகவும், பல்வேறு பிரிவுகளை குறிப்பிட்டு, கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் அதிமுக கொடியைப் பயன்படுத்தக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்று அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்,

யார் புகார் மனு அளித்தாலும், முகாந்திரம் இருந்தால் எப்ஐஆர் பதிய வேண்டும் என்றும், பொதுக்குழுவின் தீர்மானம், தேர்தல் ஆணையம் அளித்த தீர்ப்பின் நகல், டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகலல், உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல், மறு சீராய்வு தொடர்பான ஆவணம் உள்ளிட்ட இத்தனையும் அளித்தும், இந்த திமுக அரசு சசிகலா மீது எப்ஐஆர் பதிந்து நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாகவும், திமுகவின் பி டீமாகதான் சசிகலா செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் எப்ஐஆர் பதிந்து நடவடிக்கை எடுக்க இந்த அரசுக்கு என்ன தயக்கம் என்று கேள்வி எழுப்பிய அவர், நீதிமன்றத்திற்கு வந்துள்ளதால், கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayakumar blames Sasikala


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->