நெருங்கும் நீட் தேர்வு - சென்னையில் பயிற்சி மாணவி தூக்கு போட்டு தற்கொலை..!
neet coaching student sucide in chennai
இந்தியாவில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வு தேசிய தேர்வுகள் முகமை சார்பில் ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 4-ம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இதற்கிடையே நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தேர்வு அழுத்தம் மற்றும் அச்சம் காரணமாக தற்கொலை செய்யும் சோக சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில் சென்னை கிளாம்பாக்கத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த மாணவி தேர்வு அச்சம் காரணமாக தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த தர்ஷினி என்பவர் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2 முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். தற்போது வருகிற மே மாதம் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து தயாராகி வந்தார்.
இந்த நிலையில், தர்ஷினி தேர்வு அச்சம் காரணமாக தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கிளாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
neet coaching student sucide in chennai