திருச்சி ரெயில் நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்.!
two kg gold seized in trichy railway station
திருச்சி ரயில் நிலையத்தில் நேற்று காலை திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை கோட்ட ஆணையர் அபிஷேக், உதவி கோட்ட ஆணையர் பிரமோத், ஆய்வாளர் செபாஸ்டின் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னையில் இருந்து திருச்சி வந்த பயணியரில் ஒருவர், 'மாஸ்க்' அணிந்து, சந்தேகப்படும்படி இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஆர்.பி.எப்., போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அதில், அவர் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த பயணியின் பையை, சோதனை செய்தனர். அதில், 1.89 கோடி ரூபாய் மதிப்பில், 2.800 கிலோ தங்க நகைகள் மற்றும், 15 லட்சம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் அவரிடம் கேட்டதற்கு அந்த தங்க நகைகளை மதுரைக்கு கொண்டு செல்வதாக, தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, போலீசார் சம்பவம் தொடர்பாக வணிக வரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதற்கு அவர்கள் அந்த நபரிடம் இருந்த ஆவணங்களை சரி பார்த்த போது, அவை போலியானவை என்பது தெரிந்தது.
உடனே போலீசார் நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்து, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், லட்சுமணனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
two kg gold seized in trichy railway station