தொடரும் சோகம்! முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் கொடுத்த பதில்!
Union External Affair Minister Jaishankar reply TN CM Stalin Letter for Fishermen Issue
இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற் படையினரால் கைது செய்யப்படுவதும், தாக்கப் படுவதும், படகுகளை இலங்கை கடற் படையினர் பறிமுதல் செய்து கொண்டு செல்வதும் தொடர்கதையாகி வருகிறது
இந்த நிலையில், கடந்த ஜூன் 24 ஆம் தேதி, விசைப் படகில் வங்கக் கடலில் மீன் பிடிக்கச் சென்ற நாகப்பட்டினத்தை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற் படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த 2024ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இதுவரை 203 தமிழக மீனவர்கள் இலங்கை கடற் படையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும் 27 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் தொடரும் இந்த அத்துமீறல் நிகழ்வால் தமிழக மீனவர்களிடையே ஒரு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
இந்த விஷயத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு மீனவர்கள் கைது செய்யப் படுவதை தடுக்கவும், இலங்கை வசமுள்ள 47 மீனவர்களையும், 166 மீன்பிடி விசைப் படகுகளையும் விடுவிக்க கோரியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை விரைந்து கூட்ட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்துள்ள பதிலில், "மீனவர்கள் கைது செய்யப்படும்போது அவர்களை விரைந்து விடுவிக்க இலங்கையுடன் பேசி விரைவாக செயல்பட்டு வருகிறோம்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவித்து தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும்; இந்திய மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்;
மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க 10 ஆண்டுகளாக NDA கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.
English Summary
Union External Affair Minister Jaishankar reply TN CM Stalin Letter for Fishermen Issue