2 நாட்கள் வெளுத்து வாங்க போகும் மழை - எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா?
rain to seven districts in tamilnadu
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில், இன்று மிதமான மழையும், நாளை மற்றும் நாளை மறுதினம் ஏழு மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது' என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
நாளை, தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்ட மலை பகுதிகள், ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுதினம் நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில், ஓரிரு இடங்களில் கன மழையும், மற்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கடலுார் மாவட்டம் கீழச்செருவை பகுதியில், 23 செ.மீ., மழையும் லக்கூரில் 14; செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் 13; திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 11; செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 10; மாமல்லபுரத்தில் 9 செ.மீ., மழையும் பதிவானது.
English Summary
rain to seven districts in tamilnadu