பாகிஸ்தான் : பேருந்து மீது லாரி மோதி விபத்து - 18 பேர் பலி
18 killed in lorry bus collision in Pakistan
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயணிகள் பேருந்து மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு லக்கி மார்வாட் மாவட்டத்திலிருந்து பெஷாவர் நோக்கி பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது சிந்து நெடுஞ்சாலையில் கோஹாட் சுரங்கப்பாதை அருகே பேருந்து சென்றபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த டேங்கர் லாரி பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கோஹாட்டில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மீட்பு அதிகாரி ரெஹ்மத் உல்லா தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தியதில், அதிவேகமே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணையில் நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பலுசிஸ்தான் மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று பாலத்தின் தூணில் மோதி, பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
18 killed in lorry bus collision in Pakistan