பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈரான் துணை நிற்கும்: அதிபர் மசூத் பெஷேஷ்கியன்..!
Iran will stand by us in the fight against terrorism President Masoud Pezeshkian
ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் பலியானதோடு பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் துணை நிற்கிறோம் என ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் உறுதி அளித்துள்ளார்.
பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் குறித்து பிரதமர் மோடியிடம் ஈரான் அதிபர் தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார். இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களுக்கு எந்த நியாயமும் இருக்க முடியாது என அவர் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்றும் இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாகவும், அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு பதிலடி கொடுப்பது குறித்தும், இந்திய மக்களின் கோபத்தையும், வேதனையையும் பிரதமர் பகிர்ந்து கொண்டதாக ரன்திர் ஜெய்ஸ்வால் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஈரான் துறைமுகத்தில் இன்று நடந்த வெடிப்பு சம்பவத்தில், உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்ததாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Iran will stand by us in the fight against terrorism President Masoud Pezeshkian