''மீடியாக்கள் பிரதமர் மோடி, அம்பானி, அதானியின் நண்பர்கள்"; குற்றம் சாட்டிய ராகுல் காந்தி..!
A country immersed in hatred will never develop says Rahul
'' வெறுப்புணர்வில் மூழ்கியிருக்கும் நாடு வளர்ச்சி பெறாது, '' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ராகுல் இரண்டு நாள் பயணமாக தனது சொந்தத் தொகுதியான ரேபரேலி சென்றார். அங்கு ஹனுமன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அங்கு நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ''மீடியாக்கள் பிரதமர் மோடி, அம்பானி, அதானியின் நண்பர்களாக உள்ளனர்.
அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது அவர்களது பணி. அரசு தவறு செய்தால், அதற்கு அவர்களை பொறுப்பு ஏற்க வைக்க வேண்டும். ஆனால், அந்த பணியை மீடியாக்கள் சரியாக செய்யவில்லை '' என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவர், ''நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய அனைவரும், அரசியலமைப்பிற்காக போராடினர். இன்று, ஏழைகள், தொழிலாளிகள், விவசாயிகளின் குரல் உள்ளது என்றால், அதற்கு அரசியலமைப்பே காரணம். அரசியலமைப்பே இந்தியாவின் குரலாக உள்ளது. மஹாத்மா காந்தி, அம்பேத்கர், நேரு ஆகியோர் அரசியலமைப்பை கொடுத்தனர். அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி சிறை சென்றனர். அவர்கள் அரசியலமைப்பிற்காக போராடினர்.
இந்த அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டியது அரசியல் கட்சிகளின் கடமை. மீடியாக்களின் கடமை. ஆனால், மீடியாக்கள் இன்று அது குறித்து பேசாத காரணத்தினால், நான் அதனை பேசுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு ராகுல் காந்தி பேசுகையில், ''விமான நிலையங்கள், துறைமுகங்கள், உள்கட்டமைப்புகள் நிலக்கரி, ரயில்வே என அனைத்தும் விற்கப்படுகின்றன. காங்கிரஸ் தெருவில் இறங்கி போராடுகிறது. மீடியாக்கள் நமக்கு உதவி செய்யவில்லை. ஆனால், நாங்கள் போராடி தொடர்ந்து வெற்றி பெறுவோம். பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பா.ஜ., அரசு முதலாளிகளை மட்டும் ஆதரித்து வருகிறது'' என குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் அவர் பேசுகையில்; ''வெறுப்புணர்வில் மூழ்கியிருக்கும் நாடு எப்போதும் வளர்ச்சி பெறாது. இதனால் தான் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டேன். அப்போது, இந்த நாடானது அமைதி மற்றும் அன்புக்கான நாடு. வெறுப்புணர்வுக்கு ஆனது கிடையாது.'' என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, ''பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தேர்தலை சரியாக எதிர்கொள்ளாதது ஏன்? பா.ஜ.,விற்கு எதிராக எங்களுடன் இணைந்து அவர் போராட வேண்டும். ஆனால், மாயாவதி சில காரணங்களுக்காக அவர் போராட தயங்குகிறார். இது எனக்கு கவலையை தருகிறது. காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி இணைந்து தேர்தலை சந்தித்தால், பா.ஜ.,வால் உ.பி.,யில் வெற்றி பெற முடியாது.'' என்று ராகுல் காந்தி அங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
A country immersed in hatred will never develop says Rahul