சில ஹோட்டல், தள்ளுவண்டி கடைகளில் சாப்பிடும் இட்லியால் புற்றுநோய் ஆபத்து; எச்சரிக்கை விடுத்த கர்நாடக அரசு..!
Idli eaten in some hotels and trolley shops poses a risk of cancer Karnataka government has issued a warning
ஹோட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் இட்லி வேக வைப்பதற்கு, துணிக்கு பதில் பிளாஸ்டிக் தாள்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் பரவுவதாக கர்நாடக மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாநிலம் முழுதும் 251 இடங்களில், அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இதில், ஏராளமான ஹோட்டல்களில் இட்லியை வேக வைப்பதற்கு துணிகளுக்கு பதில், பிளாஸ்டிக் பேப்பர்கள் பயன்படுத்துவதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இட்லி வேகவைக்கும் போது, அதிக வெப்பத்தில் பிளாஸ்டிக்கில் இருந்து நச்சுத்தன்மை வெளியாகிறது. பிளாஸ்டிக் தாள்களை பயன்படுத்தி இட்லியை நீராவியில் வேக வைக்கும்போது, 'டையாக்சின், மைக்ரோ பிளாஸ்டிக்' போன்றவை வெளியாகும். இட்லியை சாப்பிடுபவரின் உடலுக்குள் சிறிது சிறிதாக அந்த ரசாயனங்கள் சேரும்போது, புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில்; இட்லியை வேக வைப்பதற்கு, துணிக்கு பதில் பிளாஸ்டிக் தாள்களை ஹோட்டல்களில் பயன்படுத்துவதாக வந்த புகாரின் அடிப்படையில், அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
இதன் போது, 52 ஹோட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் சேகரித்த இட்லிகளில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது தெரிந்தது என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உணவு தயாரிப்பில், பிளாஸ்டிக் பயன்படுத்த கர்நாடக மாநிலம் முழுதும் தடை விதிக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்; புற்றுநோயை உண்டாக்கும் முக்கிய காரணியாக பிளாஸ்டிக் இருக்கிறது. உணவுப் பொருட்களில் பிளாஸ்டிக் துகள்கள் சேரும் அபாயம் உள்ளது. அதை ஹோட்டல் நடத்துபவர்கள் அறவே தவிர்க்க வேண்டும். யாரேனும் அதுபோன்று செய்தால், அரசின் கவனத்துக்கு பொதுமக்கள் கொண்டு வரலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.
இதற்கிடையே, பிளாஸ்டிக் தாள்களில் வேக வைக்கப்பட்ட இட்லியை ஆய்வகத்தில் சோதித்ததாகவும், அதில், இந்த இட்லியை சாப்பிடு வோருக்கு புற்று நோய் அபாயம் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் கர்நாடக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Idli eaten in some hotels and trolley shops poses a risk of cancer Karnataka government has issued a warning