ஊழல் வழக்கு - ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஜனாதிபதி ஒப்புதல்.!
president murmu approves case file against 1300 crores scam
நாட்டின் தலைநகர் டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. கடந்த, பத்து ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்றது. அந்த ஆட்சிக்காலத்தில் அரசு பள்ளிகளுக்கு ஏராளமான வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதில் ரூ.1,300 கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.
அதிலும் குறிப்பாக முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, முன்னாள் சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த தலைமைச் செயலாளருக்கு மாநில ஊழல் தடுப்பு பிரிவு கடந்த 2022-ம் ஆண்டு பரிந்துரைத்தது.
இதற்கு முன்னதாக மாநிலத்தில் 2,400 வகுப்பறைகள் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக மத்திய ஊழல் தடுப்புப்பிரிவும் கடந்த 2020-ம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தது. இந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த குடியரசுத் தலைவரிடம் அனுமதி கோரப்பட்டது.
அதன் படி மணிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயினுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியா ஆகியோர் மீது மதுபான ஊழல் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
president murmu approves case file against 1300 crores scam