ஜனாதிபதி ஆட்சியை உடனடியாக திரும்ப பெற வேண்டும்; மணிப்பூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்..!
Presidents rule should be withdrawn immediately in Manipur
மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தால் 200 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அத்துடன், பெண் ஒருவர் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் அங்கு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டனர்.
கலவரத்தில் பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். இடையில் கலவரம் சற்று ஓய்ந்தாலும், கடந்த வருட இறுதியில் ஆயுதமேந்திய போராட்ட குழுக்களால் மீண்டும் தீவிரமடைந்தது. இதன் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 06 பேர் கடத்தி கொல்லப்பட்டனர். வீடுகள் தீக்கிரையாகின.
![](https://img.seithipunal.com/media/manip-nmyl9.jpg)
இந்நிலையில் மாநிலத்தில் நடந்த கலவரத்துக்கு ஆளும் பாஜக முதல்வர் பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக ஆடியோ பதிவுகள் வெளியாகி சர்ச்சையானது. குறித்த ஆடியோ பதிவுகள் சித்தரிக்கப்பட்டவை என ஆளும் பாஜக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் போராட்டக்குழுக்கள் இதை ஏற்க மறுத்தனர்.
ஆடியோ பதிவுகளை முன்வைத்து சுதந்திரமான விசாரணை நடத்தக்கோரி குகி அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, கடந்த 09-ந்தேதி சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
![](https://img.seithipunal.com/media/mani-vtk3t.jpg)
இதன் போது குற்றம் சாட்டப்பட்ட முதல்வர் பைரன் சிங் உரையாடல் அடங்கிய ஆடியோ டேப்புகளை ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, மத்திய தடயவியல் ஆய்வகததிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை மார்ச் 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில், மணிப்பூர் முதல்வர் பதவியை பைரன் சிங் ராஜினாமா செய்தார். பைரன் சிங்கிற்கு மாற்று முதல்வரை பாஜக தேர்வு செய்யாமல் இருந்ததால், சட்டசபையும் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டது.
![](https://img.seithipunal.com/media/cpim-vtk3t.jpg)
இந்த நிலையில் மணிப்பூரில் இன்று ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்ட நிலையில், அதை உடனடியாக திரும்பப்பெற வேண்டும், உடனடியாக புதிய தேர்தலை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தியுள்ளன.
"குடியரசுத் தலைவர் ஆட்சியின்போது, சிபிஐ (எம்) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் மாநிலத்தின் ஒருமைப்பாட்டிற்காக நிற்கும். மேலும் மாநிலத்தை உடைக்கும் எந்தவொரு முயற்சியும் அனுமதிக்கப்படாது" என மணிப்பூர் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் சாந்தா தெரிவித்துள்ளார்.
English Summary
Presidents rule should be withdrawn immediately in Manipur