பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.,யுடன் தொடர்பு: மகா கும்பமேளாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பயங்கரவாதி கைது..!
Terrorist linked to Pakistans ISI arrested for planning attack on Maha Kumbh Mela
மகா கும்பமேளாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்ட மிட்டிருந்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமைப்புடன் தொடர்புடைய பப்பர் கல்சா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.
உ.பி பிரயாக்ராஜ் மகா கும்பமேளா, திரிவேணி சங்கமத்தில் ஜனவரி- 13 முதல் பிப்ரவரி -26 வரை தொடர்ந்து 44 நாட்கள் நடைபெற்றது. இங்கு 66 கோடிக்கும் மேலான பக்தர்கள் புனித நீராடினர். இந்த கும்பமேளாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ., தொடர்புடைய பப்பர் கல்சா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி லாஜர் மாசிஹ் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது குறித்து உத்தரபிரதேச டி.ஜி.பி., பிரசாந்த் குமார் கூறியதாவது:
''கும்ப மேளாவின் போது, பப்பர் கல்சா பயங்கரவாத அமைப்பின் லாஜர் மாசிஹ் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தான். இவன் சர்வதேச அளவில் தொடர்புகளை கொண்டுள்ள பயங்கரவாதி ஆவான். அவன், இன்று உத்தரபிரதேசத்தின் கெளாம்பி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டான்.'' என்று கூறியுள்ளார்.
அத்துடன் ''சிறப்பு அதிரடிப்படை மற்றும் பஞ்சாப் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் அதிகாலை 3:20 மணியளவில் லாஜர் மாசிஹ்கை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த கைது, பயங்கரவாதத்தின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் மற்றும் வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் தீய நோக்கத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது. பாதுகாப்புப் படைகள் உயர் எச்சரிக்கையில் உள்ளன. மேலும் அவனது நெட்வொர்க் மற்றும் அவன் திட்டங்கள் பற்றிய கூடுதல் விவரங்களைக் கண்டறிய விசாரணைகள் நடந்து வருகின்றன.'' என உத்தரபிரதேச டி.ஜி.பி பிரசாந்த் குமார் மேலும் தெரிவித்துள்ளார்.
English Summary
Terrorist linked to Pakistans ISI arrested for planning attack on Maha Kumbh Mela