தமிழகத்தில் 8,898 வழக்குகள் முடித்து வைப்பு!!! - போக்சோ சிறப்பு கோர்ட்டுகள்...
total 8898 cases closed in Tamil Nadu pocso Special Courts
"தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்" என்ற சட்டத்தின் கோட்பாடுக்கிணங்க மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று பலகாலமாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கும் வழக்குகளை விசாரித்து நீதியை நிலை நாட்டும் மகத்தான பணியைக் கோர்ட்டுகள் செய்து வந்தாலும், பாலியல் குற்றங்கள் போன்ற போக்சோ வழக்குகள் நீண்டகாலமாக விசாரணையில் இருந்து வருகிறது.

போக்சோ கோர்ட்டுகள்:
குற்றம் செய்தவர்களுக்குத் தகுந்த தண்டனை உடனே கிடைத்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் போக்சோ கோர்ட்டுகள் உள்பட சிறப்பு விரைவு கோர்ட்டுகள் மத்திய அரசின் நிதி உதவியுடன் மாநிலங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் நிலுவையில் உள்ள ஒவ்வொரு 65 முதல் 165 வழக்குகளுக்கும் ஒரு சிறப்பு விரைவு கோர்ட் அமைக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் யூனியன் பிரதேசங்கள் உள்பட 30 மாநிலங்களில் சிறப்பு விரைவு கோர்ட்டுகளை அமைத்துள்ளன.
237 சிறப்பு விரைவு கோர்ட்டுகள்:
இதில் அருணாச்சல பிரதேசம்,அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சில காரணங்களைக் காட்டி சிறப்பு விரைவு கோர்ட்டுகள் இன்னும் செயல்படுத்தாமல் இருக்கின்றன . இதில் கடந்த டிசம்பர் மாதம் வரையிலான நிலவரப்படி, நாடு முழுவதும் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரிக்கும் கோர்ட்டுகள் உள்பட 237 சிறப்பு விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோர்ட்டுகளில் 1,91,633 போக்சோ வழக்குகள் உட்பட 2,99,624 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாகப் போக்சோ வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 42,404 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம்:
மேலும் தமிழகத்தில் அமைக்கப்பட்ட 14 சிறப்பு விரைவு கோர்ட்டுகள் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரித்து வருகின்றன. இதில் 8,898 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் புதுவையில் இதுவரை 122 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளது. மத்திய அரசு இதுவரை நிதியாண்டு நிலவரப்படி சிறப்பு விரைவு கோர்ட்டுகள் திட்டத்துக்காக மாநிலங்களுக்கு ரூ. 1,008 கோடி விடுவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கும், குறைந்தபட்சமாகப் புதுச்சேரிக்கும் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
total 8898 cases closed in Tamil Nadu pocso Special Courts