அரியணையில் ஏறப் போவது யார்..? டெல்லியில் வாக்குப்பதிவு தொடங்கியது!
Who will ascend the throne? Voting begins in Delhi
டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது. பாதுகாப்பு பணிகளை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது.
டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று 70 தொகுதிகளைக் கொண்ட சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.இதில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது. . 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 பேர் போட்டியில் உள்ளனர். டெல்லியின் முதல்-மந்திரி அதிஷி கல்காஜி தொகுதியிலும், முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பா.ஜனதா சார்பில் பர்வேஷ் வர்மாவும், காங்கிரஸ் சார்பில் சந்தீப் தீட்சித்தும் களம் காண்கிறார்கள். இதைப்போல கல்காஜி தொகுதியில் அதிஷியை எதிர்த்து பா.ஜனதா சார்பில் ரமேஷ் பிதூரியும், காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பாவும் மோதுகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் இன்று பலப்பரீட்சை நடக்கிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளநிலையில் பாதுகாப்பு பணிகளை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது.
மேலும் தேர்தலை முன்னிட்டு டெல்லிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள்,மதுபானக்கடைகள் மூடியிருக்கும் என்றும் ஆஸ்பத்திரி, மருந்தகம் போன்ற அத்தியாவசியமான தேவைகளுக்கான நிறுவனங்கள் தவிர மற்ற அனைத்தும் மூடப்படுகிறது என்றும் தேர்தலுக்காக மக்களின் போக்குவரத்துக்கு பஸ் மற்றும் மெட்ரோ ரெயில்கள் தங்கு தடையின்றி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகரில் தேர்தல் நடப்பதால் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் 30 ஆயிரம் டெல்லி போலீசார், 22 ஆயிரம் துணை ராணுவப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
English Summary
Who will ascend the throne? Voting begins in Delhi