தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்! அதிமுக அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து வரும் 28-ஆம் தேதி தமிழகம் முழுவது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளும் திமுகவின் கையாலாகாத் தனத்தையும், திமுக அமைச்சர்களின் அராஜகத்தையும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் செயல்பாடுகளையும், நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக மக்களுக்கு தெளிவாக புரிகின்ற வகையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமாக செய்திகளை தந்து கொண்டிருந்த கழக அமைப்புச் செயலாளரும் வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு. ஜெயக்குமார் அவர்களை முதல் தகவல் அறிக்கையில் சொல்லி இருக்கும் எந்த சட்டப் பிரிவுகளின் கீழும் எந்த விதத்திலும் சம்பந்தப்படாத திரு.ஜெயக்குமார் அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்திருப்பதை கண்டித்தும், பிணையில் வரமுடியாத அளவிற்கு தொடர் வழக்குகளை அவர் மீது புனைய முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்தும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகின்ற 28-ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10.30 மணி அளவில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு குற்றச்செயல் நடைபெறுகிறது என்று சொன்னால் அதை தட்டிக் கேட்பதற்கும், அந்தக் குற்றம் நடைபெறாத வண்ணம் குற்றச் செயலில் ஈடுபடும் நபரை கைது செய்வதற்கும் எல்லாருக்கும் உரிமை உள்ளது என்று சட்டம் சொல்கிறது. அதனடிப்படையில் கள்ள ஓட்டு போட வந்த ஒருவரை கையும் களவுமாக பிடித்து காவல் துறையிடம் ஒப்படைக்க அங்கிருந்தவர்கள் முயற்சித்த போது, அந்த நபரை அடிக்க வேண்டாம் என்று சொல்லி காப்பாற்றி காவல்துறையிடம் ஒப்படையுங்கள் என்று பொறுப்புடன் செயல்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் திரு. ஜெயக்குமார் அவர்கள் செய்தது நியாயமான செயல் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10-க்கும் அதிகமான குற்ற வழக்குகள் உள்ள, ஒரு குற்ற வழக்கில் சிறை தண்டனை பெற்ற தொடர் குற்றங்களில் குற்றவாளி நரேஷ் குமார் என்பவர் தேர்தல் நாளன்று அவர் வசிக்கும் பகுதிக்கும், அவர் வாக்களிக்கும் பகுதிக்கும் சம்பந்தமில்லாத வாக்குச்சாவடிக்கு வந்து திமுகவிற்கு ஆதரவாக கள்ள ஓட்டுப் போடுவதற்கு அவரோடு 30-க்கும் மேற்பட்ட நபர்கள் முனைப்பு காட்டிய போது அதை சட்டத்திற்கு உட்பட்டு தட்டிக் கேட்கின்ற வகையில் அவரின் கள்ள ஓட்டு நடவடிக்கையை தடுக்கும் விதமாக அவரை பிடித்து, அவர் தொடர் குற்றவாளி என்பதன் அடிப்படையில் அவரிடம் ஏதேனும் ஆயுதங்கள் இருக்கிறதா என்பதற்காகவும் அவரை சோதனை செய்து காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்ட இந்த செயலுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டது திமுக அரசின் பாசிச மனோபாவத்தை தான் காட்டுகிறது.

கடந்த 23-ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் பிணை மனு மீதான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது திரு. ஜெயக்குமார் அவர்களை மேலும் சிறையில் வைக்க நீதிமன்றம் அனுமதிக்காது என்பதை அறிந்த திமுக காவல்துறை, எந்த விதத்திலும் பொருந்தாத, எந்த நீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளாத சட்டப்பிரிவுகளை மாற்றி, முதல் தகவல் அறிக்கையை மாற்றி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது கொடூர மனம் படைத்த திமுகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் பெரும்பான்மையோர் கருதுகின்றனர்.

திமுகவைச் சேர்ந்த நரேஷ் குமார் அத்துமீறி நுழைந்து கள்ள ஓட்டு போட வந்ததை தடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த பிறகு அவர் மீது வழக்கு தொடுக்காத திமுக காவல்துறை, அடுத்த வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவை பார்வையிடச் சென்ற திரு.ஜெயக்குமார் அவர்களை மேற்கொண்டு செல்லவிடாமல் தடுத்து காவல்துறையை கண்டித்து சாலை மறியல் செய்தார் என்பதன் அடிப்படையில் பிணையில் விடக்கூடிய வழ்க்கை பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அனுப்பிய பிறகு, எந்த மேல் நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிந்த பிறகு, அந்த முதல் தகவல் அறிக்கையை மாற்றம் செய்து பிணையில் வரமுடியாத வழக்குகளை சேர்த்து நீதிமன்றத்தில் திமுக காவல்துறை சமர்ப்பித்தது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத மாண்புமிகு நீதிமன்றம் இந்த வழக்கில் அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது.

சட்டத்தை சட்டமாகவும் நீதியை நேர்மையாகவும் சந்திக்க இயலாத திமுக அரசு தன் கைப்பாவையாக மாற்றி வைத்திருக்கக்கூடிய காவல்துறையை ஏவல் துறையாக இது போன்ற பழிவாங்குதல் நடவடிக்கையை எந்த பொது ஜனமும் ஏற்றுக் கொள்ளாத வகையில் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பது வன்மையாக கண்டிக்க கூடிய செயலாகும்.

உண்மை நிலையை உணராமல் யாரோ சொன்னதைக் கேட்டு மிகப்பெரிய குற்றப்பின்னணி கொண்ட தொடர் குற்றம் புரிய கூடிய நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற குற்றவாளியை, தன்னுடைய தொண்டர் என பெருமையோடும் அந்த தொண்டனுக்கு ஒரு இன்னல் என்றால் நானே களமிறங்குவேன் என கர்ஜிப்பதும் ஒரு முதலமைச்சருக்கு, ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. காரணம் எந்த குற்றம் புரிந்தாலும் என் தலைவன் காப்பாற்றுவான் என்ற எண்ணத்தை திமுகவினருக்கு அதன் தலைவரே அறிவுறுத்துவது போல இருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் உச்சபட்சமாக நீதியை நிலைநாட்ட வேண்டும் பிடிபட்டவருக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது, சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற நல்ல நோக்கத்தோடு செயல்பட்ட முன்னாள் அமைச்சர் திரு. டி. ஜெயக்குமார் அவர்கள் மீது தனி மனித தாக்குதலுக்கு உட்படுத்தி சட்டத் தாக்குதல் நடத்தி, நீதிமன்ற காவலில் வைத்து இருப்பது எந்த நீதியும் ஏற்றுக்கொள்ளாது என்ற வகையில், திமுகவின் அடக்குமுறையையும் பழிவாங்கும் நடவடிக்கையையும் எதேச்சதிகாரப் போக்கையும், பாசிச நடவடிக்கையையும் கண்டிக்கின்ற விதத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகின்ற 28-ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10.30 மணி அளவில் தமிழகம் முழுவதும் வருவாய் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்கள் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றும்,

திமுக அரசின் அராஜக போக்கை கண்டித்து நடைபெற உள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை சம்பந்தபட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமை கழக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை ஆளும் திமுக அரசிற்கு எட்டுகின்ற வகையில் நடத்துமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Protest announced


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->