திமுகவின் அதிகார மமதை, அராஜகப் போக்கு கண்டித்தக்கது!....அரசு விழாவில் கே.பி முனுசாமியை தடுத்ததற்கு இ.பி.எஸ் கடும் கண்டனம்!
DMK pride in power anarchic tendency is reprehensible EPS strongly condemned for preventing KP Munuswamy from the government function
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கும்பாளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ராமன் தொட்டி கிராமத்தில் இருந்து சின்னாறு தொட்டி வரை தார் சாலை அமைக்க வேண்டும் என்று, நீண்ட காலமாக அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் மத்திய அரசு வழங்கிய ரூ.5 கோடி மதிப்பிலான தார்சாலை அமைக்க தி.மு.க. நிர்வாகியும், கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி மன்ற குழு தலைவருமான மணிமேகலை நாகராஜ் தலைமையில் இன்று பூமி பூஜை தொடங்கியது.
பூமி பூஜை நடைபெறுவதை அறிந்த அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், வேப்பனஅள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி, தனது ஆதரவாளர்களுடன் பூமி பூஜை நடைபெறும் இடத்திற்கு வந்து, இந்த தார் சாலை பணிக்கு தங்களுக்கும் பங்கு உள்ளது என கூறி தனியாக பூமிபூஜை போடுவதற்காக சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் இந்த பகுதியில் தங்கள் கட்சியை சேர்ந்தவர் தலைவராக உள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏ. மீண்டும் பூஜை போடக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பேரிகை-தீர்த்தம் இடையேயான சாலையில் திடீரென்று கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க.வினர் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ராமன்தொட்டி பகுதியில் மத்திய அரசின் பி.எம்.ஜி.எஸ்.ஒய் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில், வேப்பனஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், கழக துணைப் பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமி அவர்களை திமுகவைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க விடாமல் அராஜகம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.
எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அரசின் திட்டங்களுக்கான துவக்க விழாவில் கலந்துகொள்வது மரபு. ஆனால், அரசியல் நாகரிகம் என்பது கொஞ்சம் கூட இல்லாமல், அதிகார மமதையில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை அவமதிக்கும் வகையில் அராஜகப் போக்குடன் செயல்படும் திமுகவின் இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary
DMK pride in power anarchic tendency is reprehensible EPS strongly condemned for preventing KP Munuswamy from the government function