ஒரே நாடு; ஒரே தேர்தல்! தயாராகிறதா அதிமுக? செப்.4ல் ஈபிஎஸ் திடீர் ஆலோசனை!
EPS consults with AIADMK executives on September4
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கட்சியின் மாநில மாநாடு கடந்த மாதம் 20ஆம் தேதி மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிலையில் அதிமுக மாநாடு வெற்றி பெற்றதை அடுத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் "அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எம்ஜிஆர் மாளிகையில் வருகின்ற 04.09.2023 திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதுரையில் 20.08.2023 கழக வீர வரலாற்றின் பொருளாளர் எழுச்சி மாநாட்டை சிறப்புடன் நடத்தியதற்காக அமைக்கப்பட்டிருந்த பல்வேறு மாநாட்டு குழுவினர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கண்ட பொறுப்புகளில் இருக்கும் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பொது தேர்தலுடன் நாடு முழுவதும் சட்டமன்ற பொது தேர்தலும் நடத்தும் வகையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து சிறப்பு குழுவை மத்திய அரசு அமைத்துள்ள இந்த சூழலில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெறுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்ற பொது தேர்தலுடன் சட்டமன்ற பொது தேர்தலுக்கும் அதிமுக தயாராகிறதா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் அறிவிப்புக்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
EPS consults with AIADMK executives on September4