சவுக்கு சங்கர் வீடு தாக்குதல்: திமுகவின் தரங்கெட்ட ஆட்சிக்கான சாட்சி! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், சவுக்கு ஊடகத்தின் ஆசிரியரும், அரசியல் திறனாய்வாளருமான தம்பி சவுக்கு சங்கர் அவர்களது வீட்டின் மீது நடத்தப்பட்டுள்ள கோரத்தாக்குதல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சமூக விரோதக் கும்பல் பட்டப்பகலில் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, மனிதக் கழிவையும், சாக்கடையையும் வீடு முழுக்கக் கொட்டியதோடு, வீட்டை சூறையாடி, சங்கருக்கும், அவரது தாயாருக்கும் அச்சுறுத்தல் விடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

ஆளும் திமுக அரசுக்கு எதிரானக் கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைக்கிறார் சங்கர் என்பதற்காகவே, அவரைக் குறிவைத்துத் தொடர்ச்சியாகப் பழிவாங்கும் போக்கு மிக மலினமான அரசியலாகும். அவர் மீது பொய் வழக்குகளைத் தொடுத்து, சிறைக்குள் தாக்குதல் தொடுத்து, கையை உடைத்து, இருமுறை குண்டர் சட்டத்தைப் பாய்ச்சிய திமுக அரசு, தற்போது அவரது வீட்டுக்குள் தாக்குதல் நடத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது அரசியல் அநாகரீகத்தின் உச்சமாகும். மாற்றுக்கருத்து முன்வைப்பவர்களையும், அரசியலில் எதிர்முகாமைச் சேர்ந்தவர்களையும் எதிரியாகப் பாவித்து, அவர்கள் மீது அதிகாரத்தைக் கொண்டு மீது அடக்குமுறையை ஏவுவதும், சமூக விரோதிகளின் மூலம் அச்சுறுத்த முனைவதுமான இத்தகைய செயல்பாடுகள் வெளிப்படையான சனநாயகப்படுகொலையாகும். 

தம்பி சங்கர் தனது வீட்டின் மீது தாக்குதல் தொடுக்கப்படுவதை காவல்துறைக்குத் தெரிவித்தும்கூட அவர்களை உடனடியாகக் கைதுசெய்யாது வேடிக்கைப் பார்த்த செயல் திமுகவின் தரங்கெட்ட ஆட்சிக்கான சரிநிகர் சான்றாகும். ஆட்சியாளர்களின் மறைமுக அனுமதி இல்லாமல், காவல்துறையின் துணையில்லாமல் இத்தகைய தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. எல்லோராலும் அறியப்பட்ட தம்பி சவுக்கு சங்கர் போன்றவர்களுக்கே இந்நிலையென்றால், பொது மக்களுக்கும், எளிய மனிதர்களுக்கும் இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கிறது? வெட்கக்கேடு! எந்தத் திசை நோக்கினாலும் கொலை, கொள்ளை, வன்முறை வெறியாட்டம், கூலிப்படையினரின் அட்டூழியம், போதை வியாபாரிகளின் ஆதிக்கம் என தமிழகத்தின் சட்டம் ஒழுங்கும், சமூக அமைதியும் சீரழிந்துக் கிடக்கிற நிலையில், இப்போது நாடறியப்பட்ட ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்டிருப்பதன் மூலம் இது தமிழ்நாடா? இல்லை! உத்திரப்பிரதேசமா? எனும் கேள்விதான் எழுகிறது.

நான்காண்டு கால ஆட்சி! நாற்றமெடுக்கும் நாசகார ஆட்சி! சவுக்கு சங்கர் வீட்டில் வீசப்பட்ட சாக்கடைக்கழிவுகளே அதற்குச் சாட்சி" என்று சீமான் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NTK seeman condemn to DMK government savukku sankar


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->