மாவீரன் குருவின் களப்பணிகளை நினைவு கூர்ந்து போற்றுவோம் - டாக்டர் இராமதாஸ்!
PMK Vanniyar sangam Guru Dr Ramadoss
மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் ஜெ.குருவின் 64-ஆம் பிறந்த நாளில் அவரின் களப்பணிகளை நினைவு கூர்ந்து போற்றுவோம் என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "மறைந்த வன்னியர் சங்கத் தலைவரும், என் அன்பிற்குரியவருமான மாவீரன் ஜெ.குருவுக்கு இன்று 64-ஆம் பிறந்தநாள். மாவீரன் குருவின் ஒவ்வொரு பிறந்தநாளும் என்னிடம் வாழ்த்து பெறுவதில் தான் தொடங்கும். ஆனால், அவர் என்னிடம் வாழ்த்து பெற்று 8 ஆண்டுகளாகி விட்டன. கடந்த 8 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி ஒன்றாம் நாளில் மாவீரன் குரு என்னை சந்திப்பதில்லை. அவரது நினைவுகள் மட்டும் தான் எனது மனதில் நிழலாடுகின்றன.
மாவீரன் குருவை நினைக்கும் போதெல்லாம் அவரது களப்பணிகளும் நினைவில் வருகின்றன. நான் இட்ட பணிகள் அனைத்தையும் செய்தவர் குரு. அவரது 64-ஆம் பிறந்தநாளில் மாவீரன் குருவின் களப்பணிகளை நினைவு கூர்ந்து போற்றுவோம். அவரது நினைவுகளுடன் வாழ்வோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "என்னிடம் எல்லையில்லா அன்பு காட்டியவரும், மறைந்த வன்னியர் சங்கத் தலைவருமான மாவீரன் ஜெ.குரு அவர்களின் 64-ஆம் பிறந்தநாள் இன்று. மாவீரன் குரு மறைந்து 8 ஆண்டுகளாகி விட்டன. அவர் நினைவாக காடுவெட்டியில் மணி மண்டபம் அமைத்தோம். கல்விக்கோயிலின் சட்டக்கல்லூரியில் குருவுக்கு தனி வளாகம் அமைத்தோம். கம்பீரமான சிலையை கட்டமைத்தோம். அவற்றின் வழியாக குரு நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
மாவீரன் குரு நம்மை விட்டு மறையவில்லை... உணர்வாக நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது நினைவை எந்நாளும் போற்றுவோம். பாட்டாளி மக்கள் கட்சியை ஆட்சியில் அமர்த்துவோம் என்ற அவரது சபதத்தை நிறைவேற்றுவதற்காக உழைக்க இந்த நாளில் உறுதியேற்போம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Vanniyar sangam Guru Dr Ramadoss