புதிய சட்டம் இயற்ற வேண்டும் - டாக்டர் இராமதாஸ் பரபரப்பு பேட்டி!
Ramadoss PMK press meet march 20 DMK
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "வேளாண் நிலங்களை மாற்றுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது. கேரள அரசு, நெல் விளைநிலங்களை வேறு நோக்கத்திற்கு பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று உறுதியளித்துள்ளது.
புதிய சட்டம்:
ஆனால் தமிழகத்தில் முப்போகம் விளையும் நிலங்கள் அதிகாரிகளின் உதவியால் வீட்டு மனையாக மாற்றப்படுகிறது. குறிப்பாக சிப்காட் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களுக்காக அரசே விளைநிலங்களை கையகப்படுத்துகிறது. இது தடுக்கப்பட வேண்டும். 40 லட்சம் ஹெக்டர் பரப்பளவு விவசாய நிலங்கள், 15,000 ஏரிகள் அழிந்து விட்டன. இதை சரி செய்ய தமிழக சட்டப்பேரவையில் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும்.
சட்டம் - ஒழுங்கு:
தொடர்ந்து நடைபெறும் கொடூரக் கொலைகள் தமிழகத்தை "கொலைகார நாடாக" மாற்றும் அபாயத்தில் உள்ளன. நெல்லை, ஈரோடு போன்ற இடங்களில் நிகழ்ந்த கொடூரக் கொலைகள் குற்றவாளிகள் தப்பிக்கலாம் என்ற எண்ணம் காரணமாகவே நடக்கின்றன. இதை கட்டுப்படுத்த சட்டம்-ஒழுங்கை கடுமையாக நிறைவேற்ற வேண்டும்.
நகைக்கடன்:
நகைக்கடன் விதிகளை ரிசர்வ் வங்கி மாற்றியமைத்துள்ளது. இதனால், வட்டி மட்டும் செலுத்தி நகையை புதுப்பிக்க முடியாது; மீட்ட பிறகு மறுபடியும் அடகு வைக்க வேண்டும். இது ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும், எனவே இந்த புதிய விதிகளை திரும்ப பெற வேண்டும்.
தமிழில் பெயர் பலகை:
தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் மொழிப்பற்று அதிகம். குறிப்பாக கர்நாடகாவில், தமிழுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அண்மையில் கூட புதுச்சேரியில் கடைகளின் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் ஒரு வாரத்திற்குள் பெயர் மாற்றாவிட்டால், கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்தார்.
English Summary
Ramadoss PMK press meet march 20 DMK