தவெக மாநாடுக்கு அனுமதி இல்லையா? என்னதான் பிரச்சனை? ஆட்சியர் சொன்ன செய்தி! முடிவு தீபக் சிவாச் கையில்!
TVK Vijay Maanadu SP Vilupuram
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அடுத்த மாதம் 23ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், இந்த மாநாட்டுக்கு அனுமதி வழங்குவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், கடந்த வாரம் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்து, கொடியை ஏற்றி வைத்தார்.
2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில், கட்சியின் முதல் மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு அனுமதி கோரி விழுப்புரம் ஆட்சியர் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கடந்த வாரம் மனு அளித்து இருந்தார்.
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடத்த 85 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், மேலும் மாநாட்டுக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக சுமார் 70 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி உள்ளதாகவும் தெரிய வருகிறது.
தொடர்ந்து மாநாடுக்காக குறிப்பிட்ட இடத்தில் காவல்துறை அதிகாரிகள், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்திருந்த நிலையில், அனுமதி வழங்குவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக ஒரு பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
மாநாட்டிற்கு அனுமதி அளிப்பது குறித்து விழுப்புரம் எஸ்பி தான் முடிவெடுப்பார் என்று, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
மாநாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடு, போக்குவரத்து மாற்றம் மற்றும் ஒழுங்குமுறை குறித்து எஸ்பி ஆய்வு செய்து முடிவு எடுத்து அறிவிப்பார் என்று மாவட்ட ஆட்சியர் பழனி தகவல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் விடுமுறையில் இருப்பதால் முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாகவும், மாநாட்டுக்கு அனுமதி கேட்டுள்ள அந்த மனு தொடர்ந்து பரிசீலனையில் இருப்பதாகவும், விழுப்புரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், விடுமுறை முடிந்து நாளை விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் பணிக்கு திரும்பிய பிறகே முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
TVK Vijay Maanadu SP Vilupuram