சம்மனை கிழித்த விவகாரம் - சீமான் வீட்டு காவலாளிகளுக்கு ஜாமீன்.!
bail to seeman house guard
நடிகை விஜயலட்சுமி வழக்கில் சீமானிடம் விசாரணைக்கு ஆஜராகுமாறு வளசரவாக்கம் போலீசார் கடந்த 24-ந்தேதி சம்மன் அனுப்பி இருந்தனர். அதில் 27-ந்தேதி பகல் 11 மணியளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.
ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் அவரது சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். இதற்கிடையே சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் வெளிப்பக்க கதவில் மீண்டும் சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
அந்த நோட்டீசில், 'நீங்கள் ஏற்கனவே அனுப்பிய சம்மன் பேரில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே இந்த சம்மனை ஏற்று 28-ந்தேதி காலை 11 மணிக்கு நீங்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
போலீசார் சம்மன் நோட்டீசை ஒட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த சம்மனை சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் கிழித்தெறிந்தார். இந்த காட்சி தொலைக்காட்சிகளில் செய்தியாக ஒளிபரப்பானது. இது தொடர்பாக நீலாங்கரை போலீசாருக்கு வளசரவாக்கம் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்மனை கிழித்த சீமான் வீட்டு பணியாளரை கைது செய்வதற்காக போலீசார் நேற்று பிற்பகலில் சீமான் வீட்டுக்கு வந்தனர். அங்கு காவலாளிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் இருவரையும் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதில் வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சம்மனை கிழித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு காவலாளிகளுக்கும் ஜாமின் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
bail to seeman house guard