'நாட்குறிப்பு வேந்தர் ஆனந்தரங்கம் பிள்ளை பிறந்ததினம்!
Diary Chancellor Anandarangam Pillais birthday
'நாட்குறிப்பு வேந்தர்' திரு.ஆனந்தரங்கம் பிள்ளை அவர்கள் பிறந்ததினம்!
நாட்குறிப்பு மூலம் வரலாற்றை பதிவு செய்தவரான ஆனந்தரங்கம் பிள்ளை 1709ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் பிறந்தார்.
தினசரி நடக்கும் நாட்டு நிகழ்வுகளைக் குறிப்புகளாக எழுதி வைக்கும் பழக்கம் கொண்டவர். பல மொழிகளில் புலமை கொண்ட இவர் இந்திய மன்னர்கள், பிரெஞ்சுக்காரர்கள் இடையே பாலமாக விளங்கினார்.
முசபர்சங் என்ற மன்னர் இவருக்கு 3 ஆயிரம் குதிரைகளை வழங்கி, மன்சுபேதார் என்ற பட்டத்தையும் வழங்கினார். செங்கல்பட்டு கோட்டைக்கு தளபதியாகவும், ஜமீன்தாரராகவும் நியமிக்கப்பட்டார்.

ஏறக்குறைய 25 ஆண்டுகாலம் நாட்குறிப்பு எழுதியுள்ளார். 18ஆம் நூற்றாண்டின் சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள், பிரெஞ்சுப் படையின் வெற்றி, தோல்விகள், டெல்லி மீதான பாரசீக படையெடுப்பு, குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட கடும் தண்டனைகள், கடல் வணிகம், இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகள் விவரம் உட்பட பல நிகழ்வுகளின் முக்கிய வரலாற்று பதிவாக இவரது நாட்குறிப்பு திகழ்கிறது.
மக்கள் பட்ட அவதி, வெளிநாட்டினர் அடித்த கொள்ளை, புதுச்சேரி, ஆற்காடு, வந்தவாசி, தஞ்சாவூர், திருச்சி, ஹைதராபாத், டெல்லியில் நடந்த சம்பவங்கள், போர்த் தந்திரங்கள், நீதியுரைகள், ஜோதிடக் குறிப்புகள் கூட நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.
இவர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகே இவரது நாட்குறிப்புகள் கிடைத்தன. உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியான புகழ்பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீஸ் (Samuel Pepys) என்பவரைப் போன்று தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்தரங்கம் பிள்ளையை இவருடன் ஒப்பிடப்பட்டு, 'இந்தியாவின் பெப்பீஸ்' என போற்றப்பட்டார். நாட்குறிப்பு வேந்தர் எனவும் போற்றப்பட்ட இவர் தனது 51வது வயதில் 1761 ஜனவரி 10 ஆம் தேதி அன்று மறைந்தார்.
English Summary
Diary Chancellor Anandarangam Pillais birthday