திருப்பூர் || நடுவழியில் மயக்கமடைந்த பெண் - ஆம்புலன்ஸ் போல் செயல்பட்ட அரசு பேருந்து.!
government bus driver and conductor go to admitted unconsious passanger in tirupur
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பல்லடம் வழியாக ஆறாக்குளத்திற்கு அரசு மாநகர பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தப் பேருந்தில் பல்லடம் பேருந்து நிலையத்தில் ஏறிய பெண் பயணி ஒருவர் சின்னக்கரை பகுதியை கடந்து செல்லும்போது திடீரென மயக்கமடைந்தார்.
இதைப்பார்த்த சக பெண் பயணிகள் சம்பவம் குறித்து நடத்துனர் சக்திவேலிடம் தெரிவித்தனர். உடனே அவர் ஆம்புலன்சை தொடர்பு கொண்டார். அனால், ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமாகும் என்ற நிலையில், பல்லடம் போக்குவரத்து கழக கிளை மேலாளர் செந்தில்குமாரிடம் சம்பவம் குறித்து தெரிவித்தார்.
அவர் பேருந்தில் உள்ள பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்பிவிட்டு மயக்கமடைந்த பயணியை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு உத்தரவிட்டார். அதன்படி பயணிகள் வீரபாண்டி பிரிவில் இறக்கி விடப்பட்டனர்.
அதில், சில பெண்கள் மயக்கமடைந்த பெண்மணியை தனியாக விட்டுச்செல்ல மனமின்றி, தாங்களும் மருத்துவமனைக்கு வருவதாக கூறி சென்றனர். இதையடுத்து ஓட்டுநர் ராசு கண்ணன், அரசு பேருந்தை ஆம்புலன்சாக கருதி வேகமாக இயக்கினார்.
அடுத்த சில நிமிடத்தில் அந்தப் பெண் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். துரித வேகத்தில் செயல்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை பயணிகள், பொதுமக்கள் என்று பலரும் பாராட்டினர்.
English Summary
government bus driver and conductor go to admitted unconsious passanger in tirupur